குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது.

இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

உறுப்பு தானத்தை முறைப்படுத்துவதற்காக தமிழக அரசு கடந்த 2008-ம் ஆண்டு உறுப்பு தானத் திட்டத்தை தொடங்கியது. தற்போது உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது. உயிருடன் இருக்கும் போதே பலர் தங்கள் உடல் உறுப்புகளை தங்களின் இறப்புக்கு பிறகு தானமாக வழங்கி வருகின்றனர். அதேபோல், விபத்தில் மூளை சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புளை பலர் முன்வந்து தானம் செய்து வருகின்றனர். இதனால் பலர் மீண்டும் மறுவாழ்வு பெறுகின்றனர். இந்நிலையில், தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில் அரசு மரியாதை செலுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளப் பக்கத்தில்;- உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது. குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது.

தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.