மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவப்படத்தை தமிழ்நாடு சட்டப்பேரவையில் திறக்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழக முன்னாள் முதல்வரும் மறைந்த திமுக தலைவருமான மு.கருணாநிதி கடந்த 2018ஆம் ஆண்டில் காலமானார். தமிழகத்தில் மிக அதிகபட்சமாக 19 ஆண்டுகள் முதல்வராகப் பணியாற்றியவர் கருணாநிதி மட்டுமே. மேலும் தமிழக சட்டப்பேரவையில் 1957-ஆம் ஆண்டு முதல் 2018 வரை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். கருணாநிதி மறைந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அவருடைய புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டப்பேரவையில் கருணாநிதியின் முழு உருவப் படம் திறக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆகஸ்ட் 7 அன்று கருணாநிதியின் மூன்றாமாண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட உள்ளது. அப்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால், பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே கருணாநிதியின் முழு உருவப்படம் திறக்க வாய்ப்புகள் இருப்பதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே தமிழக சட்டப்பேரவையில் திருவள்ளுவர், மகாத்மா காந்தி, ராஜாஜி, அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உள்பட 15 தலைவர்கள் படம் இடம்பெற்றுள்ளது. இந்த வரிசையில் கருணாநிதியின் முழு உருவப்படம் திறக்கப்படவுள்ளது.