full day protest success by mkstalin

விவசாயிகள் பிரச்சனைகளை தீர்க்க நடத்தப்பட்ட முழு அடைப்பு போராட்டம் மாபெரும் வெற்றியைப் பெற்றிருப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

பயிர்கடன் தள்ளுபடி, காப்பீடு, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தர் மைதானத்தில் கடந்த 41 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

விவசாயிகளுக்காக முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று திமுக கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் மற்றும் தமிழக அரசு அளித்த உறுதி மொழியை ஏற்று போராட்டத்தை விவசாயிகள் தற்காலிகமாக வாபஸ் பெற்றனர். 

இதற்கிடையே கடந்த 16 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. தலைநகர் சென்னையில் ஷேர் ஆட்டோக்கள் இயங்கவில்லை. குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்பட்டு வருகின்றன. அசம்பாவிதங்களை தடுக்க 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

திருவாரூரில் போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்த ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேருந்து வசதி இல்லாததால் 4 கிலோ மீட்டர் நடக்க வைத்தே மண்டபத்திற்கு அழைத்து வந்ததாகக் கூறினார். நடைபெற்று வரும் முழு அடைப்பு மாபெரும் வெற்றியை கண்டிப்பதாகக் குறிப்பிட்ட அவர், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யாவிட்டால் மக்களை திரட்டி மீண்டும் மாபெரும் போராட்டத்தை நடத்த இருப்பதாக எச்சரித்தார்.