தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கா..? வியாபாரிகள் கதறல்..!
கொரோனா பரவலை தடுக்க சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகளுக்கான 79 சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நாடுகளில்கூட மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவிலும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது கொரோனா பரவல் குறைந்து வந்தது. தளர்வுகள் அறிவிக்கப்படும்போது லேசாக பரவத் தொடங்குகிறது. கடைகளைத் திறக்க அனுமதித்தால் அங்கு வரும் மக்கள், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற தவறுகின்றனர்.
முதல் மற்றும் இரண்டாவது அலையை விட மூன்றாவது அலை மோசமாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். கொரோனா பரவலை தடுக்க சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகளுக்கான 79 சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மக்கள் அதிகம் கூடும் ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகளை அடைக்க சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது.
இந்நிலையில், ‘’வியாபாரிகளை முன்களப் பணியாளர்களாக அறிவிக்கவேண்டும் கொரானா காலத்தில் உயிரிழந்த வியாபாரிகள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக வணிகர்கள் தங்களை பாதுகாப்பதற்கே பெரும்பாடு படுகிறார்கள். தமிழ்நாட்டில் முழு ஊரடங்கை மீண்டும் அமல்படுத்தும் நிலை ஏற்பட்டால் வணிகர்களையும் கலந்து ஆலோசிக்க வேண்டும்’’என வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா கேட்டுக் கொண்டுள்ளார்.