எலக்ஷன் முதல் ரிசல்ட் தேதி வரை... அம்சமாக முடிந்து வரும் அண்டர்கிரவுண்ட் வேலைகள்..!
ரிசல்ட் எப்படி வந்தாலும் பரவாயில்லை. முதலில், நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள வேண்டும். வெற்றியை இழந்தாலும், களத்தை இழக்கக்கூடாது
கொங்கு மண்டல அமைச்சர்கள் சொத்து, ஊழல் வழக்குகளில் சிக்காமல் இருக்க, குடும்ப, சொந்தங்களின் வரவு, செலவு கணக்குகளை நேர் செய்து கொண்டு வருகிறார்கள். தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பதை ஆளும்கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளிகள் பலர், ஏற்கனவே கணித்து விட்டனர். இதனால், பினாமி சொத்துக்களை பாதுகாத்து, விஜிலென்ஸ் ரெய்டு வந்தால் தப்பிப்பது எப்படி? கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவது எப்படி என்று அதில் நிபுணத்துவம் பெற்றவர்களிடம் ஆலோசனை கேட்டு அதன்படி மாற்றங்களை செய்யும் வேலையில் இறங்கி இருக்கிறார்கள்.
இதற்கு தமிழ்நாடு சரிப்படாது என்பதால், வெளி மாநிலத்தில் உள்ள அனுபவசாலிகளை பணியில் அமர்த்தி உள்ளார்களாம். அவர்களுக்கு ஆளுங்கட்சி முக்கிய புள்ளிகளின் கணக்கு வழக்குகளை பார்ப்பவர்கள் உதவி செய்து வருவதாக தகவல். வாக்குப்பதிவுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே உள்ள ஒரு மாத காலத்தை இவர்கள் இதற்காகவே பயன்படுத்திக்கொண்டு வருகிறார்களாம். அதாவது, வக்கீல், ஆடிட்டர் என துறை சார்ந்த வல்லுனர்களின் ஆலோசனைப்படி எல்லாம் கிளியராக நடந்து முடிந்து விட்டது.
கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் ஆளும்கட்சி எம்எல்ஏக்கள் 24 பேர் உள்ளனர். இவர்களில், நான்கு பேர் அமைச்சர்கள். இவர்கள் எல்லோரும் கூட்டாக சேர்ந்து, ‘அன்டர்கிரவுண்ட் வேலை’களை படு கச்சிதமாக முடித்து விட்டனர். ‘ரிசல்ட் எப்படி வந்தாலும் பரவாயில்லை. முதலில், நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள வேண்டும். வெற்றியை இழந்தாலும், களத்தை இழக்கக்கூடாது, இந்த கணக்கு, நம் எதிர்கால அரசியலுக்கு ரொம்ப முக்கியம்’எனக்கூறி வருகின்றனர்.