அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம்...? சட்டமன்றத்தில் அமைச்சரின் புதிய பதில்..!
அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பதில் அளித்துள்ளார்.
சட்டக்கல்லூரியில் இடப்பற்றாக்குறை இல்லை
நிதி நிலை அறிக்கை கடந்த வாரம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று இரண்டாவது நாளாக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும் கேள்வி பதில் நிகழ்வு நடைபெற்றது. இதில் தங்கள் தொகுதி சார்ந்த பிரச்சனைகளை சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பினர். இதற்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். குறிப்பாக அரக்கோணம் தொகுதியில் சட்டக் கல்லூரி துவங்க அரசு நடவடிக்கை எடுக்குமா என சட்டமன்ற உறுப்பினர் ரவி எழுப்பிய கேள்விக்கு, பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழகத்தில் சட்டக்கல்லூரி தொடங்க சுமார் 120 கோடி ரூபாய் செலவாகும் என தெரிவித்தார். தற்போதைக்கு தமிழகத்தில் சட்டக் கல்லூரிகளில் 16,094 இடங்கள் உள்ளதாக கூறினார். இதில் 15,018 இடங்கள் பூர்த்தியாகியுள்ளதாகவும், சுமார் 1076 இடங்கள் காலியாக உள்ளதாகவும் தெரிவித்தார். எனவே சட்டக்கல்லூரிகளில் இடப் பற்றாக்குறைக்கு என்ற பேச்சுக்கே இடம் இல்லையென்று கூறினார். மாவட்டத்திற்கு ஒரு சட்டக்கல்லூரி என்பது முதலமைச்சரின் எண்ணமாக இருப்பதாகவும் இதன் காரணமாகவே தேர்தல் அறிக்கையிலும் அதை பற்றி கூறியிருப்பதாக தெரிவித்தார். அதை நாங்கள் மறுக்கவில்லையெனெறு தெரிவித்தவர், அதனால் தற்போதைய நிதிநிலையை கருத்தில் கொண்டு, ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
அனைத்து பேருந்துகளிலும் இலவச பயணம்
இதே போல போக்குவரத்துறை சார்பான கேள்வி ஒன்றை அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர்ராஜூ எழுப்பினார். அப்போது பேசிய அவர், கேள்வி கேட்க வாய்ப்பளித்த சபாநாயகருக்கு கோடான கோடி நன்றி என தெரிவித்து தனது கேள்வியை தொடங்கினார். அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் வழங்கியது மகிழ்ச்சி அளித்தாலும், குறிப்பிட்ட பேருந்துகளில் மட்டுமே மகளிர் இலவசமாக செல்ல அனுமதிக்கப்படுவதால் குறித்த நேரத்தில் பெண்கள் வேலைக்குச் செல்ல இயலாமல் வேறு வழியில்லாமல் ஷேர் ஆட்டோ போன்றவற்றில் செல்வதாகவும், எனவே அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம் அனுமதி வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்து கழகம்
அதற்கு பதிலளித்த போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், மகளிருக்கு இலவச பேருந்து பயணம் வழங்கியதில் மகளிர் மகிழ்ச்சியாக உள்ளனர் என தெரிவித்தார். மகளிருக்கு இலவச பேருந்து பயணம் என்பது முதல்வரின் கனவு திட்டம் என்றும் தற்போது திருப்திகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். பெண்களுக்கு தற்போது நகர பேருந்துகளில் மட்டும் இலவச பயணம் அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் ஏற்கனவே 48,000 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகம் இயங்கி வருவதால், அனைத்து பேருந்துகளிலும் இலவசமாக அனுமதிக்க இயலவில்லை என போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.