இலவச கலர் டி.வி. பற்றி வெள்ளை அறிக்கையில் சொல்லுங்க... அந்த பணத்தை மாத்துனதை பேசுங்க.. மாஜி அமைச்சர் சரமாரி.!
ஆதி திராவிடர் நல துறைக்கு ஒதுக்கிய பணத்தை இலவச கலர் டி.வி. வாங்க மாற்றியதையும் வெள்ளை அறிக்கையில் சொல்ல வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
மதுரையில் அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டார். அந்தக் கூட்டத்தில் அவர் பேசுகையில், “நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வணிக பொருளாதாரம் படித்தவர். ஆனால், அவருக்கு சமூகப் பொருளாதாரம் தெரியாது. அதனால்தான் வெள்ளை அறிக்கைக்கு நான் மட்டுமே பொறுப்பு என்கிறார். தமிழக அரசின் செயலாளரை பக்கத்தில் வைத்துகொண்டு அறிக்கை வெளியிட்டு பிறகு, அதற்கு நிதியமைச்சர் மட்டும் எப்படி பொறுப்பேற்க முடியும்? அது தமிழக அரசின் அறிக்கைதான்.
முந்தைய திமுக ஆட்சியில் கலர் டி.வி. கொடுத்த விவகாரத்தையும் வெள்ளை அறிக்கையில் சொல்லுங்கள். ஆதி திராவிடர் நல துறைக்கு ஒதுக்கிய பணத்தை டி.வி. வாங்க மாற்றியதையும் சொல்ல வேண்டும். அப்போதுதான் அது முழுமையான வெளிப்படை தன்மையாக இருக்கும். சேவைத்துறையில் ஏற்படும் பற்றாக்குறையை எப்படி நஷ்டம் என்று சொல்ல முடியும்? பிற மாநிலங்களில் இல்லாத திட்டங்கள் எல்லாம் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக செயல்படுத்தியிருக்கிறது. மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தும்போது கடன் சுமை ஏற்படுவது இயல்புதான். எனவே இந்த வெள்ளை அறிக்கை வெற்று அறிக்கையாக உள்ளது.” என்று ஆர்.பி.உதயகுமார் பேசினார்.