ஜல்லிக்கட்டு போட்டிகளில் சீறி பாய்ந்த வெள்ளை கொம்பன் காளை உயிரிழந்தது.. குலுங்கி குலுங்கி அழுத விஜயபாஸ்கர்.!
அதிமுக முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்.
பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் உள்ளிட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளில் வீரர்களை திணறடித்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பாசமாக வளர்த்து வந்த வெள்ளைக் கொம்பன் காளை வயது மூப்பு காரணமாக பரிதாபமாக உயிரிழந்தது.
அதிமுக முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். இந்நிலையில், விஜயபாஸ்கரின் கொம்பன் காளை சில வருடங்களுக்கு முன்பு வாடிவாசலில் அனைவரையும் மிரட்டி நின்று விளையாடியது. ஆனால், அந்த கொம்பனின் விளையாட்டு ரொம்ப காலம் நீடிக்கவில்லை. ஜல்லிக்கட்டி போட்டியின் போது புயல் வேகத்தில் கொம்பன் வெளியே வரும்போது தடுப்பு மரத்தில் மோதி தலையில் பலத்த அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தது. இதனையடுத்து, தங்கள் வீட்டில் செல்லமாக வளர்த்த கொம்பனுக்குத் தோட்டத்திலேயே சமாதி அமைத்து விஜயபாஸ்கர் தினசரி வழிபட்டு வருகிறார்.
இந்நிலையில், விஜயபாஸ்கர் மற்றொரு காளையான வெள்ளைக் கொம்பனை வளர்த்து வந்தார். இந்த காளை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட போட்டிகளிலும் புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று களத்தில் ஜல்லிக்கட்டு வீரர்களை திணறடித்து பல்வேறு பரிசுகளை வென்றுள்ளது.
இந்நிலையில், வயது மூப்பு காரணமாக வெள்ளைக் கொம்பன் காளை நேற்று இரவு உயிரிழந்தது. இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் காளைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதன் பின்னர் வெள்ளைக் கொம்பன் காளை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெற்று அவரது தோட்டத்தில் புதைக்கப்பட்டது.