எனக்கு முன் ஜாமின் வேணும் - நீதிமன்றத்தை நாடினார் எம்.எல்.ஏ பழனியப்பன்...!
ஒப்பந்ததாரர் சுப்ரமணியனை தற்கொலைக்கு தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் முன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
நாமக்கல் மோகனூர் சாலையில் வசித்து வந்தவர் சுப்பிரமணியன். இவர், அரசு ஒப்பந்ததாரராக செயல்பட்டு வந்தார். அரசு கட்டிடங்கள், மருத்துவக் கல்லூரி கட்டிடங்கள் உள்ளிட்டவற்றின் கட்டுமானப் பணிகளுக்கு பெரும்பாலும் இவர்தான் ஒப்பந்ததாரராக இருந்து வந்துள்ளார்.
ஒப்பந்ததாரர் சுப்பிரமணியன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கமாக இருந்தவர். அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியபோது, இவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக சென்னை வருமான வரித்துறை சுப்பிரமணியனுக்கும் சம்மன் அனுப்பியது. இதனை அடுத்து விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் தனது மோகனூர் தோட்டத்தில் இறந்த நிலையில் சுப்பிரமணியன் உடல் கண்டெடுக்கப்பட்டது. ஒப்பந்ததாரர் சுப்பிரமணி, சந்தேகத்திற்கிடமான வகையில் இறந்து கிடந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அவரது கையில் உள்ள கடிதத்தில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் பெயரும் இடம்பெற்றிருந்தது.
இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சரும், பாப்பிரெட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினரான பழனியப்பனுக்கு சம்மன் அனுப்பபட்டது.
ஆனால் இரண்டு முறை சம்மன் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவில்லை. இதனால் அவர் மீது பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
டிடிவி ஆதரவாளராக பழனியப்பன் கர்நாடக மாநிலம் குடகில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியிருந்தார். அவரை விசாரணை செய்ய கோவை போலீசார் நேற்று ரிசார்ட்டுக்கு சென்றனர். அவரை பார்த்த பழனியப்பன் அங்கிருந்து அவசரமாக தப்பி சென்றார்.
இந்நிலையில், இன்று பழனியப்பனிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதனால் எம்.எல்.ஏ. பழனியப்பன் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.