சசிகலாவே வந்தாலும் அதிமுக தேறாது.. அறிவாலயத்தில் ஐக்கியமான கையோடு அதிமுக முன்னாள் அமைச்சர் அதிரடி..!
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், அமமுகவைச் சேர்ந்த வ.து. நடராஜன், இவரது மகனும் ராமநாதபுரம் மாவட்டச் செயலாளராக இருந்த வ.து.ந. ஆனந்த் ஆகிய இருவரும் திமுகவில் இணைந்தனர்.
அதிமுகவை எடப்பாடி பழனிசாமி ஒரு கம்பெனி போல் நடத்திவருகிறார் என முன்னாள் அமைச்சர் வ.து. நடராஜன் விமர்சனம் செய்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றதில் இருந்து அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வெளியேறிய மகேந்திரன், பத்மபிரியா, பழனிச்சாமி உள்ளிட்ட மாற்றுக்கட்சியினர் தங்களைத் திமுகவில் இணைத்துக்கொண்டனர். இந்நிலையில், இன்று திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாற்றுக்கட்சியினர் தங்களைத் திமுகவில் இணைத்துக்கொண்டனர். இந்த நிகழ்வு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
இதில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், அமமுகவைச் சேர்ந்த வ.து. நடராஜன், இவரது மகனும் ராமநாதபுரம் மாவட்டச் செயலாளராக இருந்த வ.து.ந. ஆனந்த் ஆகிய இருவரும் திமுகவில் இணைந்தனர். மேலும், தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் ஒரத்தநாடு சேகர், முன்னாள் அமைச்சரின் மகன் பட்டுக்கோட்டை செல்வம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அமமுகவினர் திமுகவில் இணைந்தனர்.
இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் வ.து. நடராஜன்;- அதிமுக என்பது உடைந்த பானை. சசிகலா இணைந்தாலும் கட்சி தேராது. அதிமுகவை எடப்பாடி பழனிசாமி ஒரு கம்பெனி போல் நடத்திவருகிறார் என விமர்சனம் செய்துள்ளார்.