திருட்டு ரயில் பயணம்... மறைந்த திமுக முன்னாள் அமைச்சரின் மகன் கைது..!
மறைந்த முன்னாள் அமைச்சர் திருச்சி செல்வராஜின் ரயில்வே சலுகை அட்டையை பயன்படுத்தியதற்காக ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்ட, அவரது மகன் கலைராஜ் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
மறைந்த முன்னாள் அமைச்சர் திருச்சி செல்வராஜின் ரயில்வே சலுகை அட்டையை பயன்படுத்தியதற்காக ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்ட, அவரது மகன் கலைராஜ் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
திருச்சி மக்களவை தொகுதியிலிருந்து, 1980-ம் ஆண்டு திமுக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் திருச்சி செல்வராஜ். 2006-2011 திமுக ஆட்சியில் வனத்துறை அமைச்சராக இருந்தவர். 2016-ம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். பின்னர், கடந்த மார்ச் மாதம் உடல்நலக்குறைவால் காலமானார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் என்ற அடிப்படையில் அவருக்கு ரயில்வே சலுகை அட்டை வழங்கப்பட்டிருந்தது. அதன் மூலம் அவரும், அவரது மனைவியும் ஆயுட்காலம் வரை முதல் வகுப்பில் கட்டணமின்றி பயணம் செய்ய முடியும்.
இந்நிலையில், பெங்களூர் மெயில் ரயிலை, காட்பாடியில் ரயில்வே விஜிலென்ஸ் அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது செல்வராஜின் மகன் கலைராஜ் H1 எனப்படும் முதல்வகுப்பு பெட்டியில், மறைந்த தனது தந்தையின் சலுகை அட்டையை பயன்படுத்தி பயணம் செய்தது கண்டுபிடிக்கபட்டது.
இதனையடுத்து கலைராஜை கைது செய்த ரயில்வே போலீசார் சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கலைராஜ் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.