அதிமுகவில் சேரும் சசிகலா.. மாஜி அமைச்சர் தங்கமணி ‘அதிர்ச்சி’ பேட்டி.. இனிமே எடப்பாடி பழனிச்சாமி கதி ?
மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா தென் மாவட்டங்களில் 2 நாட்கள் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்வேறு கோவில்களுக்குச் சென்று தரிசனம் செய்து வருகிறார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கடும் தோல்வியைச் சந்தித்தது இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலா மற்றும் டிடிவி தினகரனை அதிமுகவில் இணைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இதனால் அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் சசிகலா இரண்டு நாட்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் ஆன்மிக சுற்றுப்பயணமாக நேற்று காலை தூத்துக்குடி விமான நிலையம் வந்தார்.
அங்கிருந்து அதிமுக கட்சி கொடி கட்டிய கார் மூலம் திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதியில் உள்ள விசுவாமித்திரர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து சுவாமி தரிசனம் செய்தார். திருச்செந்தூரில் ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா அதிமுக நிர்வாகிகளுடன் சசிகலாவை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைவது குறித்து ஆலோசனை நடத்திய நிலையில், இன்று அதிமுகவிலிருந்து ஒ.ராஜா உள்ளிட்ட 18 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக ஓபிஎஸ் இபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.
இந்நிலையில், திருச்செந்தூரில் இருந்து பெரியகுளத்திற்கு திரும்பிய ஓ.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, 'அதிமுகவின் பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பின்பு நான்கு ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் முழுமையாக தோல்வி அதற்கு காரணம் ஓபிஎஸ், இபிஎஸ் அவர்கள் தலைமையிலான வழிநடத்தலே காரணம். அதிமுகவை சசிகலா தலைமையேற்று கட்சியை வழி நடத்தினால் மட்டுமே மீண்டும் கட்சி வலிமை பெறும்.
வரும் தேர்தல்களில் வெற்றி அடையும். என்னை நீக்குவதற்கு இவர்கள் இருவருக்கும் அதிகாரம் இல்லை. நான் எம்ஜிஆர் காலத்திலிருந்து அதிமுகவின் அடிப்படை தொண்டனாக இருந்து வரும் நிலையில், இவர்களுக்கு அதிகாரம் இல்லை. அதிமுகவை வழிநடத்த சசிகலா தலைமை ஏற்க வேண்டும். அதற்கு நான் முழு ஆதரவு அளிக்கிறேன் என்று எனது ஆதரவை சசிகலாவை நேரில் சந்தித்து தெரிவித்துள்ளேன்.
கடந்த 4 ஆண்டுகளில் கட்சியில் நடந்த நிகழ்வுகளை விளக்கிக் கூறி கட்சியை மீட்டெடுக்க வேண்டும் என்ற எனது விருப்பத்தை ஆதரவாளர்களுடன் சென்று தெரிவித்தேன். தான் யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் தானாக சென்று சசிகலாவை சந்தித்தேன்' என்று கூறினார்.
இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவர் பதவிக்கான தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, 'நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பதவிக்கு வரும் 7ம் தேதி தேர்தல் நடைபெறுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதிமுகவுக்கு 9, பாஜகவுக்கு ஒன்று என 10 கவுன்சிலர்கள் உள்ளனர். தேர்தல் ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும். அதிமுக கவுன்சிலர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்ட தலைவர் தேர்தலை கண்டிப்பாக நடத்த வேண்டும். நீதிமன்றமும் தேர்தலை நடத்த வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளது.
அதிமுக உறுப்பினர்களை நான் கடத்திவிட்டதாக தன் மீது பொய் வழக்கு போடப்பட்டன. உறுப்பினர்களை யாரும் கடத்தவில்லை. தேர்தல் ஜனநாய முறைப்படி நடைபெறும் என நம்புகிறேன்' என்றார். அப்போது, அதிமுகவில் சசிகலாவை சேர்க்க வேண்டும் என அதிமுகவினரே குரல் எழுப்பி வருகின்றனர் என்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதில் எதுவும் அளிக்காமல் கிளம்பிச் சென்றார்.