நீதிபதி கிருபாகரன் எழுப்பிய சரமாரி கேள்வி - போயஸ்கார்டனில் போலீஸ் பாதுகாப்பை குறைத்தது தமிழக அரசு
மறைந்த ஜெயலலிதா வசித்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தில் எதற்கு அதிகபடியான போலீஸ் பாதுகாப்பு என நீதிபதி கிருபாகரன் எழுப்பிய கேள்வியின் எதிரொலியாக அங்கு போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பை தமிழக அரசு குறைத்துள்ளது.
கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி கிருபாகரன், தாம் வரும் வழியில் போயஸ் கார்டனில் அளவுக்கு அதிகமாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் ஏன் அங்கு இன்னமும் அவ்வளவு கெடுபிடியான பாதுகாப்பு எனவும் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
நீதிபதியின் கேள்வியை அடுத்து போயஸ் தோட்ட இல்ல பாதுகாப்பு பணியில் 50 ஆக இருந்த காவலர்களின் எண்ணிக்கை, தற்போது 15-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை தமிழக காவல்துறை நீதிபதி கிருபாகரனிடம் இன்று தெரிவித்தது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டுள்ள 35 காவலர்களுக்கும் வேறு பணி ஒதுக்க நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.