அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவை ஒட்டி பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. தங்கள் தலைவி இருந்த இடத்தில் மற்ற யாரையும் வைத்து பார்க்க தொண்டர்கள் மறுக்கின்றனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதிமுக முதல்வராக ஓபிஎஸ் பொறுப்பேற்றதை விமர்சிக்காத தொண்டர்கள் , பொதுச்செயலாளராக சசிகலாவை ஏற்க மறுக்கின்றனர். இதனால் தமிழகம் முழுதும் தொண்டர்கள் தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர். 

அதே நேரம் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் , அமைச்சர்கள் உள்ளிட்டோர் சசிகலாவை பொதுச்செயலாளராக்கும் முயற்சியில் முனைப்புடன் உள்ளனர். ஒரு சில அமைச்சர்கள், ஜெயலலிதா பேரவை அமைப்பு, அவைத்தலைவர் மதுசூதனன் உள்ளிட்டோர் சசிகலாவை முதல்வராகவும் வரவேண்டும் என தீர்மானம் போடுகின்றனர்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆரம்பத்திலிருந்தே ஜெயலலிதா மரணம் குறித்தும் ,அவரது சொத்துக்கள் குறித்தும் பிரச்சனை எழுப்பி வருகிறார். ஜெயலலிதா அரசியலில் விட்டு சென்ற இடத்தை தன்னால் தான் நிரப்ப முடியும் என்று கூறியுள்ளார்.

சசிகலாவை எதிர்ப்போரும் , கட்சியின் தொண்டர்களில் ஒரு சில குழுக்களும் ஜெயலலிதாவை போன்ற சாயலும் , குரலும் கொண்ட தீபாவை ஏற்று வரவேற்று போஸ்டர் , பேனர்கள் வைக்கின்றனர். 

சென்னையில் அதிலும் ஒரு படி மேலே போய் தொண்டர்கள் அதிமுக கொடியில் அண்ணா படத்துடன் ஜெயலலிதா , தீபா படத்தை இணைத்து கொடியை ஏற்றி இனிப்பு வழங்கினர். எம்.ஜி.ஆர். நகர் சூளைப்பள்ளத்தில் ஜெயலலிதா , தீபா உருவப்படம் இருந்தக் கொடியினை G.கிருஷ்ணவேல் தலைமையில் ஏற்றி இனிப்பு பலகாரம் வழங்கினர்கள். இதில் 137வது வட்ட அதிமுக தொண்டர்கள் கலந்துக்கொண்டனர்,.இனி வருங்காலத்தில் தீபா அவர்களின் ஆட்சியை மலரும் அவர்தான் அம்மாவின் உண்மையான வாரிசு என்று தெரிவித்தனர்..