பஞ்சாப்பை வெல்வது என்பது ‘தன்னை நிலைநிறுத்துவதாக’ மோடி நினைத்துச் செயல்பட்டார். ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் துரும்பும் பா.ஜ.க.வுக்காக அசையவில்லை என்பதுதான் இந்தத் தேர்தல் உணர்த்தும் இரண்டாம் முடிவு.

ஆட்சியை அமைத்திருந்தாலும் உ.பி.யில் பா.ஜ.க.வுக்கு வீழ்ச்சியே என்பதன் அடையாளம், கடந்த தேர்தலை விட இம்முறை குறைவான இடங்களையே பெறமுடிந்தது என்பது மட்டுமல்ல; அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் வீழ்த்தப்பட்டுள்ளார்கள் என்று திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘முரசொலி’யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது. பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தது. இந்தத் தேர்தல்கள் குறித்தி திமுக சார்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் கருத்து சொல்லவில்லை. காங்கிரஸின் தோல்வி குறித்து திமுக என்ன நினைக்கிறது என்றும் தெரியாமல் இருந்தது. இந்நிலையில் திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘முரசொலி’யில் ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்து தலையங்கத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், “ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வந்திருக்கிறது. இதில் ஆச்சர்யப்படுவதற்கும், அதிர்ச்சி அடைவதற்கும் எதுவுமில்லை. ஏற்கனவே எங்கெல்லாம் ஆட்சியில் இருந்ததோ - அங்கெல்லாம் ஆட்சியைத் தக்க வைத்துள்ளது பா.ஜ.க. - ஓர் ஆளும் கட்சி, தன்னை ஆளுங்கட்சியாகத் தொடர வைத்துக் கொள்ள எவ்வளவு துடிப்பு தேவையோ, அவை அத்தனையையும் பயன்படுத்தியது. அதனால், ஆட்சி தக்க வைக்கப்பட்டது. இது நாம் அறிய வேண்டிய முதல் முடிவு!

ஆட்சியில் இல்லாத மாநிலத்தை, பா.ஜ.க. கைப்பற்றி இருந்தால்தான் அதனை அதிர்ச்சியாகப் பார்க்க வேண்டும். அதாவது, பஞ்சாப் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைந்திருந்தால் அது உன்னிப்பாகக் கவனிக்கத்தக்கது. ‘மோடி அலை’ மீண்டும் எழுவதாகவும் சொல்லலாம். ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் பா.ஜ.க.வைக் காணவில்லை. பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள இடங்கள் 117. அதில் பா.ஜ.க. 2 இடங்களில் மட்டும்தான் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரசு கட்சியின் சார்பில் அந்த மாநிலத்தை ஆண்டு கொண்டு இருந்த அமரீந்தர் சிங்கை, அங்கிருந்து பிரித்து தனது கட்சியில் சேர வலியுறுத்தியது பா.ஜ.க. அங்கு சேர்ந்தால் தனது தலை உருண்டு விடும் என்று பயந்த அமரீந்தர் சிங், புதிதாக ஒரு கட்சியைத் தொடங்கினார். அந்தக் கட்சியுடன் பா.ஜ.க. கூட்டு வைத்தது. அதாவது தனது வாக்குகளையும், காங்கிரசில் இருந்து அமரீந்தர் பிரிக்கும் வாக்குகளையும் வைத்து ஆட்சியை அமைப்பது பா.ஜ.க.வின் திட்டம்.

உ.பி.யைவிட பஞ்சாப்பில் ஆட்சி அமைப்பதை முக்கியமானதாக நினைத்தார்கள் பா.ஜ.க. தலைவர்கள். ஒன்றரை ஆண்டுகளாக தலைநகர் டெல்லியின் சாலையில் அமர்ந்து - இதுவரை எதையும் திரும்பப் பெறாத மோடியிடம் இருந்து - மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வைத்தவர்கள் பஞ்சாப் விவசாயிகள். இவர்களை வன்முறையாளர்கள், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள் என்று கொச்சைப்படுத்திப் பார்த்து, எதுவும் நடக்காத நிலையில் சட்டத்தை திரும்பப் பெற்றது மோடி அரசு. இத்தகைய பின்னடைவு அவர் ஆட்சிக்கு வந்த 2014 க்குப் பிறகு நடக்கவில்லை. அதனால்தான் பஞ்சாப்பை வெல்வது என்பது ‘தன்னை நிலைநிறுத்துவதாக’ மோடி நினைத்துச் செயல்பட்டார். ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் துரும்பும் பா.ஜ.க.வுக்காக அசையவில்லை என்பதுதான் இந்தத் தேர்தல் உணர்த்தும் இரண்டாம் முடிவு.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆட்சியைப் பறிகொடுத்துவிடாமல், தக்க வைத்துக் கொண்டுள்ளது பா.ஜ.க. அம்மாநிலத்தில் மொத்தமுள்ள இடங்கள் 403. இதில் பா.ஜ.க. 256 இடங்களையும் கூட்டணியுடன் சேர்த்து 274 இடங்களையும் கைப்பற்றி இருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் 325 இடங்களைப் பெற்ற கட்சி அது. ஒப்பீட்டளவில் பார்த்தால் இது சரிவுதான். சாதனைக்காக வாக்களிப்பதாக இருந்தால் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகமாகி இருக்க வேண்டும். வாக்கும் 2 சதவிகிதம் தான் அதிகமாகி இருக்கிறது. ஆனால் சமாஜ்வாடி கட்சி கடந்த தேர்தலை விட 10 சதவிகித வாக்குகளை அதிகம் பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜ்வாடியும் சேர்ந்திருந்தால் பா.ஜ.க. வீழ்ச்சியைக் கண்டிருக்கும். ஆட்சியை அமைத்திருந்தாலும் உ.பி.யில் பா.ஜ.க.வுக்கு வீழ்ச்சியே என்பதன் அடையாளம், கடந்த தேர்தலை விட இம்முறை குறைவான இடங்களையே பெறமுடிந்தது என்பது மட்டுமல்ல; அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் வீழ்த்தப்பட்டுள்ளார்கள்.” என்று முரசொலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.