போலீஸ் எட்டி உதைத்ததில் பலியான உஷா குடும்பத்துக்கு நிதியுதவி… கணவரிடம் வழங்கினார் கமல்ஹாசன்….
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியில் தலைவருமான கமல்ஹாசன் தான் அறிவித்தபடி போலீஸ் எட்டி உதைத்ததில் பலியான திருச்சி உஷா குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
திருச்சியில் தனது கர்ப்பிணி மனைவியுடன் இருசக்கர வானகத்தில் சென்ற ராஜா என்பவரை, போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் விரட்டி சென்று எட்டி உதைத்ததில் ராஜாவின் மனைவி உஷா சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
அப்போது உஷா கர்ப்பிணியாக இருந்தார் எனவும் தகவல் பரவியது. அந்த விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து காமராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரம், தமிழக காவல் துறையினருக்கும், பொதுமக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அப்போது சென்னை சைதாப் பேட்டையில் நடைபெற்ற பெண்கள் தின விழாவில் உயிரிழந்த உஷா குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாக கமல்ஹாசன் அறிவித்தார்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டதில் கலந்து கொள்ள அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திருச்சி சென்றிருந்தார். அப்போது, உஷாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி செய்தார். உஷாவின் கணவர் ராஜாவிடம் அதற்கான காசோலையை கமல் கொடுத்தார்.