உங்கள் மிரட்டலுக்கு அஞ்ச இது பாபா காலம் அல்ல சூர்யா காலம்.. பாமகவை வெறுப்பேற்றும் விசிக.
அதனால் எப்படியாவது உணர்வை தூண்டிவிட்டு கட்சியை ஒருங்கிணைக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். தங்களின் இருப்பை நிரூபித்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக சூர்யாவை எதிர்க்கும் அரசியலில் இறங்கியுள்ளனர்.
நீங்கள் அவ்வளவு எளிதில் மிரட்டுவதற்கு இவர் ரஜினி அல்ல சூர்யா என்றும், அவரும் இந்த மண்ணின் மைந்தர்தான் என்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் சங்கத்தமிழன் பாமகவை எச்சரித்துள்ளார். தியேட்டர்களை கொளுத்துவோம் என்பது குடிசைகளை கொளுத்துவது போல் அல்ல என்றும் அவர் விமர்சித்துள்ளார். ஜெய் பீம் திரைப்படம் சமூகத்தில் எந்த அளவிற்கு தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளதோ அதே அளவுக்கு பாமக உள்ளிட்ட வன்னிய அமைப்புகளால் கடுமையாக எதிர்க்கப்பட்டும் வருகிறது. வன்னியர்களின் அடையாளமாக அக்னி சட்டியையும், வன்னியர் சங்க தலைவரான மறைந்த ஜே குருவை இழிவு செய்ய வேண்டும் என்பதற்காகவே வில்லன் கதாபாத்திரத்திற்கு குருமூர்த்தி என பெயர் சூட்டப்பட்டு இருப்பதாகவும், பாமக உள்ளிட்ட வன்னிய ஆதரவாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் சூர்யாவுக்கு கடிதம் எழுதிய நிலையில் நடிகர் சூர்யாவும் அதற்கு எழுதிய பதில் கடிதம் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. அந்த குறிப்பிட்ட காட்சியை மட்டும் மாற்றி விட்டால் போதாது, 3 கோடி வன்னியர்களிடம் சூர்யா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென பாமகவினர் கொந்தளித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி சூர்யாவை தாக்குபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும், அக்காட்சியை சேர்ந்தவர்கள் பேசிவருவது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர். அந்த வரிசையில் விடுதலை சிறுத்தைகளின் மாநில இளைஞரணி செயலாளர் சங்கத்தமிழன் பாட்டாளி மக்கள் கட்சியை கண்டித்து யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
பாட்டாளி மக்கள் கட்சி எந்தளவிற்கு வெறுப்பு அரசியல் செய்கிறது என்பதை கடந்த சில ஆண்டுகளாக கவனித்து வருகிறோம், உழைக்கும் வன்னிய மக்களை தூண்டி அதன்மூலம் தனது குடும்பத்தை செல்வ செழிப்புள்ளதாக்கி மாற்றிக் கொண்டதை தவிர அந்த சமூக மக்களுக்கு ராமதாஸ் செய்தது என்ன. தற்போது அன்புமணி நடத்தும் இந்தப்பெயர் அரசியல் வன்னிய சமூகத்தையே அவமானப்படுத்தும் வகையில் உள்ளது. வன்னியர்களின் உழைப்பால் உருவாக்கப்பட்ட வன்னியர் அறக்கட்டளையை தனது சொந்த சொத்தாக மாற்றிக் கொண்டுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். வன்னிய இளைஞர்களை தவறான வழியில் நடத்தி அவர்களின் எதிர்காலத்தையே சீரழிக்கும் வகையில் பாமகவின் நடவடிக்கைகள் இருந்து வருகிறது. ஆனால் சிவக்குமார் தனது பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்த்துள்ளார். அகரம் என்ற ஒரு அறக்கட்டளை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். இதுதான் மக்களுக்கு தேவை. தற்போது பாமகவின் அரசியல் எதிர்காலம் என்பது கேள்விக்குறியாகி கிடக்கிறது.
அதனால் எப்படியாவது உணர்வை தூண்டிவிட்டு கட்சியை ஒருங்கிணைக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். தங்களின் இருப்பை நிரூபித்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக சூர்யாவை எதிர்க்கும் அரசியலில் இறங்கியுள்ளனர். அன்புமணி சூர்யாவுக்கு கடிதம் ஒன்று எழுதினார், அந்தக் கடிதத்தை பார்த்து சூர்யா பயந்து விடுவார் என அவர் எதிர்பார்த்தார். ஆனால் அது நடக்கவில்லை, இதனால் திரையரங்கை கொளுத்துவோம் சூர்யாவை தாக்குவோம் என்றெல்லாம் மிரட்டுகிறார்கள். நீங்கள் மிரட்டுவதற்கு இது பாபா காலம் அல்ல. உங்கள் மிரட்டலுக்கு அடிபணிய இவர் ரஜினி அல்ல, இவர் சூர்யா. இது பாபா காலம் அல்ல இது சூர்யா காலம். இவர் ரஜினிகாந்த் அல்ல இவர் சூர்யா. இவரும் இந்த மண்ணின் மைந்தர் தான். பாபாவை மிரட்டியது போற ஜெய்பீம் சூர்யாவையும் மிரட்ட முடியாது. சூர்யா அமைதியாக செல்வதால் அவரை மிரட்டி விடலாம் என எண்ணுகிறார்கள், எங்களைப் பொறுத்த வரையில் சூர்யா ஒரு புரட்சியாளர். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.