farmers condemns agriculture minister dhhuraikannu

கனமழை காரணமாக நாகை, திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கிய நிலையில், பருவமழையால் விவசாயத்திற்கு பாதிப்பில்லை என தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கூறியிருப்பதற்கு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வடகிழக்குப் பருவமழை தொடங்கிய முதல் ஒருவாரத்தில் நாகை மற்றும் திருவாரூர் ஆகிய கடலோர டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதில், நாகை மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் ஏக்கர், திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஏக்கர், கடலூர் மாவட்டத்தில் 80000 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கக் கூடிய இத்தகைய நிலையில், வடகிழக்குப் பருவமழையால் எந்தவிதமான பயிர் பாதிப்பு இல்லை என்று வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு அறிவித்திருப்பது உண்மையை மூடிமறைக்கும் செயல் எனவும் வேளாண் துறை அமைச்சரே இத்தகைய செயலில் ஈடுபட்டிருப்பதை வன்மையாக கண்டிப்பதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தமிழக அரசு ஆய்வு செய்து, பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு தலை ரூ.15000 அறுவடைக்கு தயாராக இருந்து பாதிக்கப்பட்டதற்கு ஏக்கருக்கு தலா ரூ.25000 இழப்பீடாக வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மறுசாகுபடி பணிகளுக்கு உதவக் கூடிய வகையில் இந்த இழப்பீடு தொகையை தாமதமில்லாமல் வழங்குவதுடன், விதை, உரம் உள்ளிட்ட இடுபொருட்களும் தட்டுப்பாடில்லாமல் வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.