ஓபிஎஸ்க்கு எதிரான போராட்டத்தில் கரம் கோர்த்த திமுக – அதிமுக அம்மா அணி தொண்டர்கள் !! மேலூரில் கடையடைப்பு…மறியல் !!!
முல்லைப் பெரியாறில் இருந்து தங்களுக்கு தண்ணீர் திறக்காமல், பி.டி.ஆர். கால்வாய் பாசனப்பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டதைக் கண்டித்து ஒரு போக பாசன விவசாயிகள் மதுரை மேலூரில் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டதுடன், சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதில் திமுகவினரோடு தினகரன் அணியைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்..
மேலூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் முல்லைப் பெரியாற்றில் இருந்து ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கவேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஆனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பி.டி.ஆர். கால்வாய் மற்றும் தந்தை பெரியார் விரிவாக்க கால்வாய் பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறக்க இருப்பதாக பொதுப்பணித்துறையினர் அறிவித்தனர். இதற்கு முக்கிய காரணம் துணை முதலலமைச்சர் ஓபிஎஸ்தான் எனவும் விவசாயிகள் குற்றம்சாட்டியிருந்தனர்.
இதனைக் கண்டித்தும், பாசனத்திற்கு தண்ணீர் திறக்கக் கோரியும், மேலூரில் கடையடைப்பு போராட்டத்திற்கு விவசாயிகள் அழைப்பு விடுத்திருந்தனர். இதையடுத்து இன்று காலை முதல் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கீழவளவு, வெள்ளலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே தங்கள் பகுதிக்கு தண்ணீர் திறக்காத பொதுப்பணித்துறை அதிகாரிகளைக் கண்டித்து மேலூர் பொதுப்பணித்துறை அலுவலகத்தை ஆயிரக்கணக்கான விவசாயிகள் முற்றுகையிட்டு போரட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் , மேலூர் திருச்சி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் மேலூர் பகுதியில் சுமார் ஒரு நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியல் குறித்து தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்படாததால் திருச்சி – மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.