சசிகலாவுக்கு சலுகையா...?? - 'ஷாக்' ஆன வெற்றிவேல் எம்எல்ஏ...!
சிறையில் சசிகலாவுக்கு சலுகை தரப்படுவதாக பொய்யான தகவல்கள் பரப்புவர்கள் மீது அவதூறு வழக்கு தொடருவோம் என டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
கடந்த 12ம் தேதி பெங்களூரு சிறைத்துறை டிஐஜி டி.ரூபா காவல்துறை ஐ.ஜி ஆர்.கே.தத்தாவுக்கு அனுப்பிய அறிக்கையில் தன்னுடன் பணிபுரியும் உயர் அதிகாரி ஒருவர் சிறையில் சசிகலாவுக்கு சகல வசதிகளையும் செய்து கொடுப்பதற்காக ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.
குறிப்பாக சிறைத்துறை எச்.எஸ்.சத்யநாராயண ராவ், அவரது அலுவல் உதவியாளரும் சசிகலா தரப்பிடமிருந்து லஞ்சம் பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சசிகலா அடைக்கப்பட்டுள்ள அறையிலேயே தற்காலிக சமையலிடம் உருவாக்கப்பட்டு அவருக்கு சமைத்துக் கொடுக்க சிறையில் இருக்கும் பெண்மணி ஒருவரை பிரத்யேகமாக ஏற்பாடு செய்திருப்பதாகவும் அந்த அறிக்கையில்கூறியிருந்தார்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கர்நாடகா முதல்வர் சித்தராமய்யா பெங்களூரு மத்திய சிறைச்சாலையில் முறைகேடுகள் நடப்பதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக விசாரதணை நடத்த, உள்துறை அமைச்சகத்தில் பணிபுரியும் வினய்குமார் என்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தினகரன் ஆதரவளரான பெரம்பூர் தொகுதி எம்எல்ஏ வெற்றிவேல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு சலுகை வழங்கி வருவதாக சிலர் பொய் புகார் பரப்பி வருவதாகவும், அவர்கள் மீது அவதூறு வழக்கு தொடருவோம் என தெரிவித்தார்.