தமிழகத்தில் முழு ஊரடங்கு மேலும் நீட்டிப்பு? முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தீவிர ஆலோசனை..!
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் கொரோனா முதல் அலையை விட 2வது மிக வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும், ஊரடங்கை மக்கள் சரியாக பின்பற்றாத காரணத்தால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே சென்றது. இதனையடுத்து, 31ம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்காக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில், ஊரடங்கால் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், தேவைப்பட்டால் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11.00 மணிக்கு முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், தமிழக அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், காவல்துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள், பல்வேறு துறையைச் சேர்ந்த அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது, தளர்வுகளற்ற முழு ஊரடங்கை நீட்டிப்பது, கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள்வெளியாகியுள்ளன.