exit poll results in gujarat and himachal predesh

குஜராத்தில் பாஜக வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், தொலைக்காட்சி சேனல்கள், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடத் தொடங்கி உள்ளன.

இதில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு சாதகமாகவே உள்ளன. இமாச்சல பிரதேசத்திலும் பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. 

182 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட குஜராத்தில் ஆட்சியமைக் 92 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. கடந்த 22 ஆண்டுகளாக குஜராத்தில் பா.ஜ.க. ஆட்சியில் உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் 68 தொகுதிகள் உள்ளன. இங்கு ஆட்சியமைக்க 35 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இரு மாநிலங்களிலும் பதிவான ஓட்டுக்கள் வரும் 18-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தற்போதைய நிலவரப்படி குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க. 115 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க வாய்ப்பு உள்ளதாகவும், காங்கிரஸ் கட்சி 65 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் டைம்ஸ் நவ்-விஎம்ஆர் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதேபோல் பாஜக 108 இடங்களிலும், காங்கிரஸ் 74 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக ரிபப்ளிக்-சி ஓட்டர், நியூஸ் 18-சி ஓட்டர் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. 

இமாச்சல பிரதேசத்தை பொருத்தவரை, பா.ஜ.க. 47 முதல் 55 இடங்கள் வரை பிடித்து ஆட்சிக்கு வரலாம் என்றும், காங்கிரஸ் 13 முதல் 20 இடங்கள் வரை பிடிக்கலாம் என்றும் இந்தியா டுடே கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

பா.ஜ.க. 55 தொகுதிகள் வரை பிடிக்க வாய்ப்பு உள்ளதாக சாணக்யா கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 13 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.

பா.ஜ.க.வுக்கு சாதகமாக 51 சதவீதம் வாக்காளர்களும், காங்கிரசுக்கு 38 சதவீத வாக்காளர்களும் வாக்களித்திருப்பதாக இந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது.

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவினால் அது ராகுலுக்கு பெரும் பின்னடைவை உண்டாக்கும் என அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.