இந்த சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான சட்டமுன்வடிவு கொண்டு வரப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

இந்த சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான சட்டமுன்வடிவு கொண்டு வரப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

நீட் விவகாரம் குறித்து சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேச்சுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் இவ்வாறு பதிலளித்தார். அவர் சட்டம் மன்றத்தில் இது குறித்து விராவக பேசியதாவது, மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே.. இன்று எனக்கு முன்னால் தன்னுடைய கன்னிப்பேச்சில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய வகையிலே பல வினாக்களை எல்லாம் தொடுத்து, இங்கே நம்முடைய மாண்புமிகு உறுப்பினர் திரு. உதயநிதி அவர்கள் பேசியிருக்கிறார்கள். எனவே அந்த பிரச்சினைகளுக்கெல்லாம் சம்பந்தப்பட்ட துறையின் உடைய அமைச்சர்களிடம் அடுத்த மானிய கோரிக்கை விவாதத்தின்போது அதற்குரிய விளக்கங்களை பெறலாம். 

ஆனால் முக்கியமான ஒன்று நீட் பிரச்சினை குறித்து அவர் இங்கே அழுத்தந்திருத்தமாக குறிப்பிட்டுச் சொன்னார், நீட் பிரச்சனையைப் பொறுத்தவரையில் கட்சிப் பாகுபாடுகளை எல்லாம் மறந்து, அனைவரும் ஒன்று சேர்ந்து, அதற்காக குரல் கொடுக்க வேண்டும் என்ற நிலையில் நாம் இருக்கிறோம். அதில் எந்த மாற்றமும் கிடையாது. அந்த அடிப்படையில்தான் தேர்தல் நேரத்தில் நாங்கள் உறுதிமொழி தந்தோம். திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தான் நம்முடைய இலட்சியமாக இருக்கும். அது குறித்து நிச்சயமாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று உறுதிமொழி தந்திருக்கிறோம். 

அதனால்தான் நாங்கள் ஆட்சிக்கு வந்த உடனே இது பற்றி அலசி ஆராய்ந்து பொதுமக்களுடைய கருத்துக்களையெல்லாம் கேட்டு, ஆய்வு அறிக்கையை அரசுக்கு வழங்க வேண்டும் என்று சொல்லி, ஓய்வுபெற்ற நீதியரசர் திரு. ஏ.கே ராஜன் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, அவரும் அந்த பணியை நிறைவேற்றி ஒரு அறிக்கையை தந்திருக்கிறார்கள். தற்போது அந்த அறிக்கை சட்டரீதியாக பரிசீலிக்கப்பட்டு, இந்த கூட்டத்தொடரிலேயே அதற்குரிய சட்ட முன்வடிவு கொண்டு வரப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.