Exclusive Photos karunanithi family marriage
ஸ்டாலின் இல்லாத வீட்டில் அழகிரி குடும்பம் இன்று செம கலகலப்பாக வலம் வந்திருப்பதுதான் அறிவாயலயத்து ஹாட்டஸ்ட் டாபிக்!
கருணாநிதியின் மகன் மு.க.முத்துவை நினைவிருக்கிறதா? எம்.ஜி.ஆர்_க்கு எதிராக சினிமாவில் கருணாநிதியால் திரி கிள்ளிவிடப்பட்ட பட்டாசு இவர். ‘ஊர் குருவி சில நேரம் பருந்தென்று நினைப்பதுண்டு’ என்று புரட்சித்தலைவரை உரசிப்பாடி பின் புஸ்வாணமானவர்.

சில காலங்களில் இவருக்கும் கருணாநிதிக்குமிடையில் பிளவு வந்தது. இவரது போக்குகள் சரியில்லாததால் கோபாலபுர குடும்பங்கள் இவரது குடும்பத்தை சீண்டாமல் விட்டன. இந்த கதை தனி டிராக்கில் போகும்...போகட்டும்.

இந்த மு.க.முத்துவின் மகள் வழி பேரனான மனுரஞ்சித்திற்கும், நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கும் காதல். கடந்த ஜூலை மாதம் நிச்சயிக்கப்பட்ட இந்த திருமணம் இன்று கோபாலபுர இல்லத்தில் நடந்தது.

தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்த கருணாநிதிக்கு பார்வையாளர்களால் கிருமி தொற்று வரும் வாய்ப்பிருந்தததால் பல மாதங்களாக அவரை காண யாரையும் அனுமதிக்கவில்லை. ஆனால் கடந்த 1 மாதமாக வரிசையாக செலக்டீவ் விசிட்டர்களை சந்தித்த கருணாநிதி அதன் பின் முரசொலி பவளவிழா கண்காட்சியரங்கத்தை பார்வையிட்டு தன் கட்சியினரை பரவசப்படுத்தினார்.
.jpg)
இந்த நிலையில் இன்று அவரது கோபாலபுர இல்லத்தில் மனுரஞ்சித் - அக்ஷிதா ஜோடியின் திருமணம் சிறப்பாக நடைபெற்றது. உடல் நலக்குறைவுக்கு பின் கருணாநிதியை காண யார் சென்றாலும் கூடவே ஸ்டாலின் இருப்பது வழக்கமாக இருந்த நிலையில் இன்று கோபாலபுர இல்லத்தில் வெகு விமரிசையான திருமணமே நடந்தும் ஸ்டாலின் அங்கு இல்லை.

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அவர் பசும்பொன்னில் இருந்ததால் இங்கு வரமுடியவில்லை என்று பொது தகவல். ஆனால் இதற்கு பின் ஏதோ குடும்ப உள் அரசியல் இருக்கிறது என்று சில நாட்களுக்கு முன்பே தனி தகவல் வந்தது. அந்த உள் அரசியல் என்ன என்பது இன்று வெளிச்சமானது. அது...அழகிரி தன் குடும்ப பரிவாரங்களோடு இந்த திருமணத்தில் கலந்து கொண்டதுதான்.

அரசியல் ரீதியாக அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் இடையில் கடும் மோதல் உருவாகி பிளவு ஏற்பட்டு பல மாதங்களாகிவிட்டது. இரு தரப்பும் இன்னும் இணக்கம் கொள்ளாத இந்த சூழலில் குடும்ப விழாவுக்கு அழகிரி வருகையில் தான் அங்கிருந்தால் அது சரியாக இருக்காது என்றெண்ணியே மதுரை பக்கம் ஒதுங்கிவிட்டார் ஸ்டாலின். தேவரை காரணம் காட்டி தப்பித்துக் கொண்டார்! இந்த விழாவில் ஸ்டாலினின் குடும்ப பரிவாரங்கள் அடக்கி வாசிக்க, அழகிரி படையோ ஆல் ரவுண்டராக ஜொலித்தது.

கருணாநிதிக்கு வலது காதில் அருகில் சென்று சொன்னால்தான் எதுவும் கேட்கும் சூழல். அதனால் அடிக்கடி அப்படி பேசி அவரை அளவளாவிக் கொண்டார். அழகிரி மகன் துரை, தனது மனைவி அனுஷாவோடு தாத்தாவை நெகிழ்ந்து போய் நெருங்கி நின்று பாசம் கொட்டினார். அழகிரி, அவர் மனைவி காந்தி அழகிரி, அழகிரியின் இரண்டாவது மகள் என்று இந்த டீம் மொத்தமாக இன்று கோபாலபுர இல்லத்தை குத்தகைக்கு எடுத்து குஷியாகிவிட்டார்கள்.

மு.க. தமிழரசுவின் மகனும், நடிகருமான அறிவுநிதியும், துரை தயாநிதியும் தாத்தாவோடு செல்ஃபி எடுத்து குதூகலித்தார்கள். தங்கள் குடும்பம் கோபாலபுரத்தை அமர்க்களமாக ஆக்கிரமித்த புகைப்படங்களை அழகிரியின் மகன் துரைதயாநிதி உடனுக்குடன் தன் சமூக வலைதள பக்கத்தில் போட்டு யாரையோ உஷ்ணமாக்கிக் கொண்டேயிருந்தார்....!

இதையெல்லாம் பார்த்து சீயானுக்குதான் கிலியாகியிருக்கும்!
