பரபரக்கும் மதுரை... ஏக்கத்தில் அஞ்சாநெஞ்சன்... அண்ணனுக்கு முன் முந்திக் கொண்ட மு.க.ஸ்டாலின்..!
கண்டிப்பாக விரைவில் சென்னைக்கு வந்து உன்னை சந்திப்பேன் என தனது தம்பி மு.க.ஸ்டாலினிடம் கூறியிருந்தார் மு.க.அழகிரி.
கருணாநிதி மரணத்துக்கு பின்பும் அழகிரியை கட்சியில் சேர்க்க ஸ்டாலின் சம்மதிக்கவில்லை. இதனால் கலைஞர் திமுக என்ற பெயரில் மு.க.அழகிரி புது கட்சி தொடங்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை என்றாலும் தொடர்ந்து திமுகவையும், ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து வந்தார் மு.க.அழகிரி. ஸ்டாலின் முதல்வராக வாய்ப்பே இல்லை என்று கூறினார்.
அந்த விமர்சனங்களை கடந்து ஸ்டாலின் தமிழக முதல்வரானார். அதன்பின் தனது தம்பி முதல்வராவதில் பெருமையடைவதாக அழகிரி கூறினார். ஸ்டாலினின் பதவியேற்பு விழாவுக்கு அழகிரியும் அழைக்கப்பட்டார். அழைப்பின் பேரில் பதவியேற்பு விழாவுக்கு வந்த அழகிரியின் மகன் துரை தயாநிதியை கட்டிப்பிடித்து வரவேற்பு கொடுத்தார் ஸ்டாலின் மகன் உதயநிதி. இந்த புகைப்படம் இணையத்தில் வைரஸ் ஆனது. அதைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலினுக்கு தொலைபேசியில் வாழ்த்து கூறினார் அழகிரி. இதன்மூலம் பல ஆண்டுகள் நீடித்து வந்த ஸ்டாலின்-அழகிரி மோதல் முடிவுக்கு வந்ததாக திமுக தொண்டர்கள் கொண்டாடினார்கள்.
இந்நிலையில், இன்றும், நாளையும் அவர், சேலம், மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார் மு.க.ஸ்டாலின். இன்று இரவு மதுரை செல்கிறார்.
எப்படி பதவியேற்பு விழாவில் துரை தயாநிதியும், உதயநிதி ஸ்டாலினும் கட்டிபிடித்து வாழ்த்துக்கள் கூறினார்களோ அதே போல மதுரையில் ஸ்டாலினும் அழகிரியும் கட்டிப்பிடித்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வார்கள் என மதுரை உடன்பிறப்புகள் எதிர்பார்க்கிறார்கள். இன்று இரவு ஸ்டாலின் மதுரை வந்த பின் ஸ்டாலின்-அழகிரி சந்திப்பு நடக்கும் என்று உற்சாகத்தில் இருக்கிறாரகள திமுக உடன்பிறப்புகள். கொரோனா தொற்றால் பதவியேற்பு விழாவிற்கு வரமுடியவில்லை. கண்டிப்பாக விரைவில் சென்னைக்கு வந்து உன்னை சந்திப்பேன் என தனது தம்பி மு.க.ஸ்டாலினிடம் கூறியிருந்தார் மு.க.அழகிரி. ஆகையால், அண்ணன் சென்னை வருவதற்கு முன் தம்பி மதுரை செல்வதால் அங்கு இருவரும் கட்டிப்பிடித்து அன்பை பொழிவார்கள் என எதிர்பார்க்கிறார்கள் உடன்பிறப்புகள்.