ஆன்லைன் வகுப்பில் அத்துமீறிய ஆசிரியர்... முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு..!
ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஆன்லைனில் பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு செய்த சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தால் அப்பள்ளியின் பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலரும் பெரும் கலக்கத்தில் உள்ளனர். இந்நிலையில் ஆன்லைன் வகுப்பு தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கிடையே ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான புகார்கள் மீது அதிரடியாக நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில், மாணவ, மாணவிகள் ஆன்லைன் வகுப்பு குறித்த புகார்களை அளிக்க விரைவில் ஹெல்ப் லைன் எண் அறிமுகம் செய்ய வேண்டும், இணைய வகுப்புகளில் முறையற்ற முறையில் நடப்பவர்களை போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும், மாணவ - மாணவிகள் அளிக்கும் புகார்களின் கீழ் சைபர் பிரிவு அதிகாரிகள் உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்ததாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.