ரஜினி கட்சியில் சேர தூது விடும் அ.தி.மு.க., - தி.மு.க., 'முன்னாள்' அமைச்சர்கள்! பாஜக, காங்கிரசில் இருந்தும் பாய திட்டமாம்!
கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் ரஜினி காந்த், தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட பின், அவரது கட்சியில் இணைவதற்கு, அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகளை சேர்ந்த, முன்னாள் அமைச்சர்கள் சிலர், துாது அனுப்பிய தகவல் வெளியாகியுள்ளது. உள்ளாச்சி தேர்தலில் போட்டியில்லை, வரும் சட்டசபை தேர்தலுக்கு முன், தனிக்கட்சி துவக்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக, ரஜினி அதிரடியாக அறிவித்தார். தமிழகம் முழுவது இந்த அறிவிப்பை, அவரது ரசிகர்கள், பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியை வழிநடத்தி செல்ல, யாரும் இல்லை என்ற சோகத்தில் அதிமுக தொண்டர்கள் உள்ளனர். அதன் வெளிப்பாடாக தான், சமீபத்தில், கூட்டுறவு அமைச்சர் ராஜு பேசுகையில், 'நானும் ரஜினி ரசிகன்' என, முன்னாடியே ஒரு பிட்டை போட்டு வைத்துள்ளார்.
ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, ஓரங்கட்டி வைக்கப்பட்ட, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த, மாஜி அமைச்சர் ஒருவரும், தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட, தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த, முன்னாள் அமைச்சர்ஒருவரும், ரஜினியை சந்திக்க, நேரம் கேட்டு உள்ளனர்.
திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க., பிரமுகர்கள், பா.ஜ.,வில் இணைய திட்டமிட்டிருந்தார்களாம். ஆர்.கே.நகரில் நோட்டா விடம் தோற்றுப்போன சோகத்தில் காத்திருந்த அவர்கள் தற்போது, ரஜினி துவக்கவுள்ள கட்சியில் சேர தயராகியுள்ளனர். அதேபோல, கன்னியாகுமரி மாவட்டம், காங்கிரஸ் வட்டார தலைவர்கள் சிலர், தங்களின் பதவிகளை ராஜினாமா செய்து விட்டதாக, ரஜினி மன்றத்திற்கு தகவல் வந்ததாம். மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள, தி.மு.க., பிரமுகர்களும், ரஜினி பக்கம் ஓட்டம் பிடிக்க, தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளனர்.