ஜெயிச்சதுக்கப்புறம் தொகுதிப் பக்கமே காணோம்… அன்புமணியிடம் கேள்வி கேட்ட அதிமுக தொண்டர் வாயில் கும்மாங் குத்து !!
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே அதிமுக கூட்டணி வேட்பாளர் அன்புமணி ராமதாஸிடம் எங்கே 5 வருஷமா தொகுதிப்பக்கம் காணோம் என கிண்டல் செய்த அதிமுக தொண்டர் வாயில் முன்னாள் அமைச்சர் செம்மலை கும்மாங்குத்து விட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
17 ஆவது மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடக்கிறது. தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கும், 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடக்கிறது.
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக புதிய நீதி கட்சி, புதிய தமிழகம் ஆகியவை இணைந்த ஓரணியாக போட்டியிடுகின்றன. இதேபோல் திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, இடதுசாரிகள் மதச்சாப்ற்ற முற்போக்கு கூட்டணில் போட்டியிடுகின்றன. இது தவிர டி.டி.வி.தினகரனின் அமமுக, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி என பல கட்சிகள் களத்தில் உள்ளன.
இந்நிலையில் தர்மபுரி தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாமகவின் அன்பமணி ராமதாஸ் மீண்டும் போட்டியிடுகிறார். இவர் சேலம் மாவட்டம் மோச்சேரி அருகே சிந்தாமணியூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அன்புமணிக்கு ஆதரவாக அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை வாக்கு சேகரித்தார்.
அன்புமணி பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது அதிமுக தொண்டர் ஒருவர், அவரைப் பார்த்து 5 ஆண்டுகளாக எங்கே போனீர்கள் ? என கேள்வி எழுப்பினார்.
தொண்டரின் கேள்வியால் ஆத்திரமடைந்த முன்னாள் அமைச்சர் செம்மலை, கேள்வி கேட்ட தொண்டரின் வாயில் சரமாரியாக குத்தினார். இதனால் அங்கிருந்த பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பலர் முன்னிலையில், கேள்வி கேட்ட ஒரே காரணத்துக்காக தொண்டர் ஒருவரை முன்னார் அமைச்சர் தாக்கியது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.