அதிமுக அலுவலகத்திற்கு பாதுகாப்பு கொடுங்க..! பிளான் பண்ணி ATTACK பண்ணறாங்க ..!
கட்சியில் வேண்டுமென்றே குழப்பத்தை கொண்டு வர முயற்சிக்கின்றனர் என்றும் யாரும் நுழைந்து கலகம் ஏற்படுத்தாத வகையில் அதிமுக அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக முத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் புகார் மனு அளித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி நடந்த செயற்குழு கூட்டத்தில் சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டு , அதிமுக நிர்வாகிகளுக்கான உட்கட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. மேலும் அதிமுக தேர்தல் விதிகளில் உட்பிரிவுகளில் சில திருத்தங்கள் கொண்டு வந்து அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே ஒன்றை ஓட்டின் வாயிலாக இணைந்தே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுக்கபடுவார்கள் என்று மாற்றிமைக்கபட்டது.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்சியின் அமைப்புகளுக்கு பொது தேர்தல் நடத்த வேண்டும் என்று விதிக்கேற்ப தற்போது தேர்தல் அறிவிக்கபட்டுள்ளது. அதன் அடிப்படையில், அதிமுக உட்கட்சித் தேர்தலுக்கான ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் வேட்பு மனுத்தாக்கல் நேற்று முதல் தொடங்கியது. நேற்று, ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வேட்புமனு கொடுக்க ஓட்டேரியை சேர்ந்த அதிமுக தொண்டர் பிரசாத் சிங் என்பவர் வந்தார். ஆனால், அவருக்கு வேட்புமனு கொடுக்கப்படவில்லை. இதனையடுத்து வெளியே வந்த பிரசாத் சிங், ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது கட்சிக்கு எதிராக பேசியதாக, அங்கிருந்த அதிமுக வினர் அவரை அடித்து விரட்டினர். இதனால் , அதிமுக அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே இன்று அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தி என்பவர் வேட்புமனுத் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் அவரைத் தாக்கினர். இதனால் அப்பகுதியில் மோதல் உருவாகும் சூழல் நிலவியது.
இதனால், அதிமுக தேர்தலில் குழப்பம் ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாகவும், அதிமுக தலைமை அலுவலகத்துக்குப் பாதுகாப்பு கோரி அக்கட்சியின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "அதிமுக உட்கட்சித் தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்த கட்சிக்கு சம்மந்தம் இல்லாதவர்கள் முயற்சி செய்துவருகின்றனர். கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள், சிலரை அனுப்பி குழப்பம் ஏற்படுத்த முயல்வதை எப்படி அனுமதிக்க முடியும்? ஜனநாயக முறையில் நடைபெற உள்ள அதிமுக உட்கட்சித் தேர்தலைப் பொறுத்துக்கொள்ள இயலாத சிலர் சதி செய்கின்றனர். தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்தும் நபர்கள் மீது மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சட்டம் - ஒழுங்கைக் காப்பாற்ற காவல் ஆணையரிடம் மனு கொடுத்துள்ளேன். யாரும் நுழைந்து கலகம் ஏற்படுத்தாத வகையில் அதிமுக அலுவலகத்துக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும். தகுதியுடையவர்கள் யார் வேண்டுமானாலும் அதிமுக தேர்தலில் போட்டியிடலாம், யாரும் தடுக்க முடியாது" எனத் தெரிவித்தார்.
வரும் டிசம்பர் 7 ஆம் தேதி அதிமுக உட்கட்சித்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அதனை எதிர்த்து முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கின் விசாரணையின் போது, இரு தரப்பு வாதங்களும் கேட்காமல் தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக நிரூபிக்கப்பட்டால் தேர்தலை ரத்து செய்ய தயங்கமாட்டேம் என்றும் நீதின்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் கே.சி. பழனிச்சாமி தொடர்ந்த வழக்கு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி அடுத்த மூன்று வாரங்களில் பதிலளிக்க அதிமுக தரப்புக்கு உத்தரவிட்டு வழக்கு ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.