நான் ஜெயலலிதாவையே ஒரு கை பார்த்தவன் டா...? ராகுல் காந்தி மேடையில் கட்சியினரை மிரட்டிய ஈவிகேஎஸ்...!
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ராகுல் காந்தி கலந்து கொண்ட கூட்டத்தில் இரண்டாம் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காங்கிரஸ் என்றாலே பல கோஷ்டிகளைக் கொண்ட கட்சி என்பதை அனைவரும் அறிவர்.கட்சிக்குள்ளே பல கோஷ்டிகள் இருப்பதால் அவர்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கமான நிகழ்வு. தற்போது சென்னை சத்தியமூர்த்தி பவனில் மீண்டும் கோஷ்டி மோதல் ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரசின் முக்கிய தலைவரான ராகுல் காந்தி நேற்று சென்னை வந்திருந்தார். அவரை வரவேற்பதற்காக காங்கிரஸ் கட்சி சார்பாக சென்னை மாநகரம் முழுவதும் கட்சிக் கொடி கட்டி கலக்கியிருந்தனர் காங்கிரஸ் கட்சியினர்..சென்னை விமான நிலையம் வந்திறங்கிய ராகுல் காந்திக்கு காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வரவேற்பு அளித்தனர்.
இதனையடுத்து முதலமைச்சரின் உங்களில் ஒருவன் நான் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற ராகுல் காந்தி காரில் கே.எஸ்.அழகிரி மற்றும் காங்கிரஸ் சட்ட மன்ற கட்சி தலைவர் செல்வ பெருந்தகை மட்டுமே சென்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் சத்திய மூர்த்தி பவன் செல்ல ராகுல் காந்தி திட்டமிட்டிருந்தார். இதற்காக சத்திய மூர்த்தி பவனில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மூன்றாவது முறையாக சத்தியமூர்த்தி பவனுக்கு வரும் ராகுல் காந்திக்கு வரவேற்க அனைத்து கோஷ்டி தலைவர்களும் திரண்டிருந்தனர். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு 2வது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதற்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.
அப்போது மேடைக்கு வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் தனக்கு 2 வது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டு இருந்ததைக்கண்டு முகம் சுழித்தார்.இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. தனது ஆதரவாளர்களை சமாதானம் படுத்த மேடை ஏறிய ஈவிகேஎஸ் இளங்கோவன், எனக்கு மேடையில் அவமரியாதை செய்தால் கூட உங்களுடைய பார்வையில் எனக்கு மரியாதை கிடைப்பதாகவே கூறினார்.தன்னைப் பொறுத்தவரையில் எனக்கு மரியாதை வேண்டும் என்று நினைப்பவன் அல்ல என்றும் காங்கிரஸ் தொண்டர்களுக்கு மரியாதை தர வேண்டும் என்று நினைப்பவன் தான் நான் என கூறினார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வளர்வதற்கு தொண்டர்கள் மட்டும் உழைத்தால் போதாது தலைவர்களும் உழைக்க வேண்டும் என கூறினார். ஆனால் இதற்கு ஒரு சிலர் ஒத்துழைக்காமல் இருப்பதாவும் குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசியவர் நான் ஜெயலலிதாவையே ஒரு கை பார்த்தவன் என்று ஆவேசமாக பேசிவிட்டு மேடையில் முதல் வரிசையில் அமர்ந்தார் ஈவிகேஎஸ்..
இதனை தொடர்ந்து சத்திய மூர்த்தி பவன் வந்த ராகுல்காந்தி தொண்டர்கள் மத்தியில் பேசுகையில் இந்தியாவில் காங்கிரஸ் கட்சியை வலிமையாக்க வேண்டும் என்றால் முதலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என கூறினார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய வாய்ப்பு இருப்பதாகவும் வலிமையான அஸ்திவாரத்தை போட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். ஒரு அறையில் 50 காங்கிரஸ் கட்சியினர் இருந்தால் தமிழகத்தை பொருத்தவரை 500 காங்கிரஸ் தொண்டர்கள் இருப்பதற்கு சமம் என கூறினார். காங்கிரஸ் கட்சியினர் பல தலைவர்கள் தலைமையில் பிரிந்து இருப்பதையே ராகுல்காந்தி சுட்டிகாட்டி கூட்டத்தில் பேசியதாகவே காங்கிரஸ் நலம் விரும்பிகள் பேசிக்கொண்டனர். பல முறை காங்கிரஸ் தலைவர்கள் ஒற்றுமையோடு செயல்படுங்கள் என்று கூறினாலும் மீண்டும் மீண்டும் உள்குத்து வேலை நடப்பதாலும், ஒவ்வொரு தலைவர்களும் எலியும் பூனையுமாகவே உள்ளது காங்கிரஸ் கட்சியை வளர்ப்பது தமிழகத்தில் கேள்வி குறியாகவே உள்ளது.