ஜெயலலிதா சென்ட்டிமென்ட்டுடன் களம் இறங்கிய ஈவிகேஎஸ்.இளங்கோவன் ! வெற்றிக்கு கை கொடுக்குமா ?
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் போடி தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிட்டபோது தங்கிய அதே பங்களாவில் தற்போது ஈவிகேஎஸ்.இளங்கோவனும் தங்கி பிரச்சாரம் செய்து வருவதால் கண்டிப்பாக ஜெயலலிதா போல் இளங்கோவனும் ஜெயித்துவிடுவார் என காங்கிரஸ் கட்சியினர் சொல்லி வருகின்றனர்.
தேனி தொகுதி எம்ஜிஆர், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் என்று மூன்று முதலமைச்சர்களை உருவாக்கிய தொகுதி என்பதால் தற்போது பலரது கவனமும் தேனி பக்கம் திரும்பியுள்ளது.
கடந்த 1984 ஆம் ஆண்டு எம்ஜிஆர், 2002, 2004-ல்ஜெயலலிதா ஆகியோர் ஆண்டிபட்டியில் வெற்றி பெற்று முதலமைச்சராகயுள்ளனர். மேலும் போடி தொகுதியில் போட்டியிட்ட ஓபிஎஸ்ம் முதலமைச்சர்னார்.
ஜெயலலிதா போட்டியிட்டபோது தேனி என்ஆர்டி. நகரில் உள்ள மினி பங்களாவில் தங்கி பிரசாரப் பணிகளை மேற்கொண்டார். இத்தேர்தலில் மிகப் பெரிய வெற்றிபெற்றதும் அதிமுகவினர் அந்த வீட்டை சென்ட்டிமென்ட்டாக பார்க்கத் தொடங்கினர்.
இதைத் தொடர்ந்து, 2004-ல்ஆண்டிபட்டியில் போட்டியிட்டபோது சென்டிமென்ட் காரணமாக மீண்டும் அதே வீட்டிலேயே ஜெயலலிதா தங்கினார். அந்த முறையும் வெற்றி பெற்றார்.
இதேபோல் சென்னையில் இருந்து வந்த காங்கிரஸ் வேட்பாளர் ஆரூண் இதே சென்டிமென்ட்டில் ஜெயலலிதா தங்கிய வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் தங்கி பிரசாரப் பணிகளை மேற்கொண்டார். அந்த தேர்தலில் அவரும் வெற்றி பெற்றார். இதையடுத்து ஜெயலலிதா தங்கிய வீடு பல கட்சியினரிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தேனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ்.இளங்கோவன் ஜெயலலிதா தங்கியிருந்த வீட்டை தற்போது வாடகைக்கு எடுத்துள்ளார்.
இதையடுத்து ராசியான வீடு என்பதால் ஜெயலலிதா போல இளங்கோவனும் மிகப் பெரிய வெற்றிபெறுவார் என காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகின்றனர்.