திமுகவை வீழ்த்த எல்லோரும் ஒண்ணு சேரணும்... கூக்குரலிடம் டி.டி.வி.தினகரன்..!
10 ஆண்டுகளாக தமிழக மக்களால் புறக்கணிக்கப்பட்டிருக்கும் திமுகவை, வருகிற சட்டமன்றத் தேர்தலில் தலையெடுக்கவிடாமல் செய்ய வேண்டும்.
தேர்தலில் திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சசிகலா கொரோனா தொற்று காரணமாக விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதன்பின் கொரோனாவில் இருந்து குணமடைந்ததையடுத்து மருத்துவர்கள் அறிவுரைப்படி பெங்களூருவிலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். அவர் வரும் 7ம் தேதி சென்னை திரும்புவார் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘அரசியலில் திமுகவுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த ஜெயலலிதாவை பழிவாங்க, சட்டத்தின் பெயரால் அவரும், சசிகலாவும் வழக்கில் சிக்க வைக்கப்பட்டனர். தற்போது சசிகலா புடம் போட்ட தங்கமாக மீண்டெழுந்திருக்கிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த அவர் வரும் 8ம் தேதி தமிழகம் திரும்ப உள்ளார். அந்த நாளை, திருவிழாவைப் போல கொண்டாட தொண்டர்கள் தயாராகி வருகின்றனர்.
10 ஆண்டுகளாக தமிழக மக்களால் புறக்கணிக்கப்பட்டிருக்கும் திமுகவை, வருகிற சட்டமன்றத் தேர்தலில் தலையெடுக்கவிடாமல் செய்ய வேண்டும். ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்களான அனைவரும் ஒற்றுமையோடு, சசிகலாவின் கரங்களை வலுப்படுத்த வேண்டும். தமிழக மக்களின் நலன்களுக்கு எதிரான திமுகவை தேர்தலில் வீழ்த்துவதை ஒரே நோக்கமாக கொண்டு, அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்’என குறிப்பிட்டுள்ளார்.