Asianet News TamilAsianet News Tamil

ஸ்டாலின் அலுவலகத்தை முற்றுகையிட்டவர்களுக்கு சம்மன்.! இளைஞர்களின் வாழ்க்கையை பலியாக்கும் நடவடிக்கை-சீறும் இபிஎஸ

அமைதியான வழியில் போராடிய தங்களுக்கு காவல் துறை சம்மன் வழங்கினால், தங்களது எதிர்காலமே பாழாகிவிடும் என்றும்,  அரசு வேலை மற்றும் வெளி நாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு பறிபோய்விடும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 
 

EPS Condemns Police Summons to Protesters Demanding Gangman Jobs KAK
Author
First Published Sep 24, 2023, 11:38 AM IST

கேங்மேன் பணி- போராட்டம்

கேங்மேன் பணிக்கு தேர்வு செய்யப்படவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்காததை கண்டித்து சென்னை கொளத்தூரில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் சட்டமன்ற அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு போலீசார் சம்மன் அனுப்பி வருவதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், கேங்மேன் பதவிக்காக 2019-ஆம் ஆண்டு உடற்கூறு தகுதித் தேர்வினை (Physical Test) 100 சதவீத நேர்மையுடன் அம்மாவின் அரசு நடத்தியது.

இந்தத் தேர்வை எதிர்த்து அப்போதைய எதிர்க்கட்சிகளும், அவர்களைச் சார்ந்த தொழிற்சங்கங்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டன. கேங்மேன் பணிகளுக்கான உடற்கூறு தேர்வு 'முழுமையாக ஒளிப் பதிவு செய்யப்பட்டதையும், 100 சதவீதம் நேர்மையுடன் நடைபெற்றதையும்' அம்மாவின் அரசு விளக்கமாக எடுத்துக் கூறியதைத் தொடர்ந்து,

EPS Condemns Police Summons to Protesters Demanding Gangman Jobs KAK

 அதிமுக ஆட்சியில் தேர்வு

சென்னை உயர் நீதிமன்றம் கேங்மேன் தேர்வுக்கு விதித்த தடையாணையை ரத்து செய்தது. நீதிமன்ற உத்தரவினைத் தொடர்ந்து, அம்மாவின் அரசு கேங்மேன் பணியிடங்களுக்கான நபர்களைத் தேர்வு செய்யும் பணியினை வெளிப்படையாக நடத்தியது. கொரோனா நோய்த் தொற்றுக்குப் பிறகு, அம்மாவின் அரசு 22.2.2021 அன்று, 9,613 நபர்களுக்கு கேங்மேன் பணி நியமன ஆணைகளை வழங்கியது. தொடர்ந்து 5,237 நபர்களுக்கு கேங்மேன் பணி நியமன ஆணைகளை வழங்குவதற்கு தயார் நிலையில் இருந்தபோது, 2021 தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலுக்கான Code of Conduct அமலுக்கு வந்ததால், அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை.

EPS Condemns Police Summons to Protesters Demanding Gangman Jobs KAK

பணி ஆணை வழங்காத திமுக அரசு

திமுக அரசு பதவியேற்றவுடன், அம்மா அரசால் கேங்மேன் பணிகளுக்குத் தேர்வான 5,237 நபர்கள், தங்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டி அமைதியான முறையில் பல போராட்டங்களை நடத்தி விடியா திமுக அரசின் கவனத்தை ஈர்த்து வந்தனர். அவர்களது தொடர் போராட்டத்தையடுத்து, தமிழ் நாடு மின்சார வாரியத் தலைவர், அவர்களுடைய கோரிக்கையை பரிசீலிப்பதற்காக ஒரு கமிட்டி அமைத்து முடிவு எடுக்கப்படும் என்று அறிவித்தார். கமிட்டி அமைக்கப்பட்டு அதன் முடிவு மின்சார வாரியத்தின் முழு பெஞ்சுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பிறகும், தங்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்காமல் வீண் காலதாமதம் செய்வதாக, போராடியவர்கள் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் தெரிய வருகின்றன.

EPS Condemns Police Summons to Protesters Demanding Gangman Jobs KAK

ஸ்டாலின் அலுவலகம் முற்றுகை

தங்களது கோரிக்கையினை முதலமைச்சரின் பார்வைக்குக் கொண்டு செல்லும் வகையில், கடந்த 20.9.2023 அன்று கொளத்தூரில், முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்களுடைய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு, கேங்மேன் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட சுமார் 800 விடுபட்ட கேங்மேன்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். அப்போது காவல்துறை அவர்களைக் கைது செய்தது. மேலும், போராடிய அனைவருக்கும் சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான பணிகளை காவல்துறை மேற்கொண்டு வருவதாகவும், இவ்வாறு அமைதியான வழியில் போராடிய தங்களுக்கு காவல் துறை சம்மன் வழங்கினால், தங்களது எதிர்காலமே பாழாகிவிடும் என்றும்,  அரசு வேலை மற்றும் வெளி நாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு பறிபோய்விடும் என்றும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அச்சம் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிய வருகின்றன.

EPS Condemns Police Summons to Protesters Demanding Gangman Jobs KAK
சம்மனை திரும்ப பெற வேண்டும்

திமுக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முதலமைச்சரின் தொகுதியிலேயே, கேங்மேன் பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்ட சுமார் 800 விடுபட்ட கேங்மேன்கள் போராட்டம் நடத்திவிட்டார்கள் என்ற எண்ணத்தில், அவர்களுக்கு சம்மன் வழங்க முயற்சிக்கும் திமுக அரசின் காவல்துறை, அம்முயற்சியை கைவிட வேண்டும் என்றும், தங்களது எதிர்காலத்திற்காகப் போராடும் இளைஞர்களுடைய வாழ்வினை பலியாக்கும் எந்தவித முயற்சியிலும் ஈடுபட வேண்டாம் என்று காவல் துறையை வலியுறுத்துகிறேன்.

மேலும், கேங்மேன் பணிகளுக்குத் தேர்வான 5,237 இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு, அவர்களுக்கு உடனடியாக கேங்மேன் பணி நியமன ஆணைகளை வழங்க,  திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios