ஈபிஎஸ் வீட்டில் 2 மணி நேர மின் வெட்டா..! செந்தில் பாலாஜி கூறிய புதிய விளக்கம் ?
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் இரண்டு மணி நேரமாக மின் வெட்டு ஏற்பட்டதாக வெளியான தகவலுக்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
ஈபிஎஸ் வீட்டில் மின் வெட்டு
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மின் வெட்டு ஏற்பட்டு வருவதாக தமிழக சட்டப்பேரவையில் எதிர்கட்சிகள் கூறிவரும் நிலையில், தனது வீட்டிலையே இரண்டு மணி நேரம் மின் வெட்டு ஏற்பட்டதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார். நேற்று சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொங்கணாபுரம் பகுதியில் அதிமுக சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, அப்போது செய்தியாளர்களிடம் பேசும் போது, எனது வீட்டிலும் இன்று காலை 2 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது. அனைவருமே மின்சாரத்தை நம்பித்தான் இருக்கிறோம். வீட்டில் மின்சாரம் இல்லாவிட்டால் இரவில் யாரும் தூங்க முடியாது. அதிலும் நகர் பகுதிகளில் மின்சாரம் இல்லையென்றால் தூங்கவே முடியாது. நிலக்கரி பற்றாக்குறை காரணமாகத்தான் மின் வெட்டு ஏற்படுவதாக தெரிவித்தவர், மத்திய அரசிடம் பேசி உரிய வகையில் நிலக்கரி பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
முறைப்படி அறிவித்த பிறகே மின் தடை
மின் வெட்டு தொடர்பாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறிய தகவல் தமிழக மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமி வீட்டில் ஏற்பட்ட மின் வெட்டு தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, எதிர்கட்சித் தலைவர் தனது இல்லத்தில் இரண்டு மணி நேரமாக மின்சாரம் இல்லை என்ற தகவலை தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் இல்லம் அமைந்துள்ள சேலம் நெடுஞ்சாலை நகரில் இருந்து ஐந்தரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கந்தம்பட்டி துணை மின் நிலையம் உள்ளது. இந்த துணை மின் நிலையத்தில் கூடுதலாக ஒரு மின்மாற்றி அமைக்கும் பணிகள் தொடங்கி தற்போது நிறைவடைந்துள்ளது.அங்கு மின்மாற்றி அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக இரண்டு மணி நேரம் மின் தடை ஏற்படுத்தப்பட்டது. அதுவும் முறைப்படி தகவல் தெரிவித்த பிறகு மின்தடை ஏற்படுத்தப்பட்டது. எனவே இந்த விஷயம் தெரிந்தும் தவறான குற்றச்சாட்டை எதிர்கட்சி தலைவர் கூறியுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.