சொன்னது என்னாச்சு? திமுகவை லெப் ரைட் வாங்கிய ஆர்.பி.உதயகுமார்...!
நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக 505 தேர்தல் வாக்குறுதி கொடுத்தது. அதில், நீட் தேர்வினை ரத்து செய்வோம் என்று கூறினார்கள். அதை நம்பி ஓட்டு போட்டு மாணவர்கள் காத்திருக்கும் போது தற்போது நீட் தேர்வை மாணவர்கள் சந்திக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
கொரோனா தொற்று கிராமங்களுக்குள் நுழைய விடாமல் பாதுகாப்பு அரணாக அன்றைய அதிமுக அரசு விளங்கியதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியம் கள்ளிகுடி ஒன்றிய அதிமுக சார்பில் ஜெயலலிதா பேரவை கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி. உதயகுமார் தொண்டர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது, பேசிய அவர் தமிழகத்தில் கொரோனா 3வது அலை ஏற்பட்டு விட்டதோ என்ற அச்சம் எழுந்துள்ளதாக வேதனை தெரிவித்தார். நோய்த்தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க திமுக அரசிடம் வலியுறுத்தினால் அரசு காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுக ஆட்சியின் மீது வீண் பழி போடுவதாக குற்றம்சாட்டினார்.
கொரோனா 2-ம் அலையின்போது கிராமங்களில் உயிரிழப்புகள் அதிகரித்தன. முதல் அலையின் போது தடுப்பூசி இல்லை. ஆனாலும் கிராமங்களில் கொரோனாவை நுழைய விடாமல் பாதுகாப்பு அரணாக அன்றைய அதிமுக அரசு விளக்கியது. நாம் செய்த சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்லவில்லை. திமுக அரசு நோய் பரவலை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தது என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும், நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக 505 தேர்தல் வாக்குறுதி கொடுத்தது. அதில், நீட் தேர்வினை ரத்து செய்வோம் என்று கூறினார்கள். அதை நம்பி ஓட்டு போட்டு மாணவர்கள் காத்திருக்கும் போது தற்போது நீட் தேர்வை மாணவர்கள் சந்திக்க வேண்டும் என்று கூறி உள்ளனர். இதுபோன்ற பல்வேறு தேர்தல் வாக்குறுதியை கூறினீர்களே. சொன்னது என்னாச்சு? என்று அரசை கேள்வி கேட்கும் உரிமையை பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிற்கு மக்கள் வழங்கி உள்ளார்கள்.மக்கள் எண்ணங்களை அரசின் கவனத்திற்கு நாங்கள் கொண்டு வருகிறோம். ஏற்றுக்கொண்டால் நல்லது. ஏற்றுக்கொள்ளாவிட்டால் உங்களுக்கு தான் இழப்பு என்று ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.