ஸ்டாலின் பிறந்தநாளில் இப்படியா?... திமுகவினருக்கு தேர்தல் பறக்கும் படையினர் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்...!
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. பணப்பட்டுவாடா உள்ளிட்ட முறைகேடுகளை தவிர்க்கும் விதமாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பிலும், வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றன.
திமுக தலைவர் ஸ்டாலின் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு, இன்று காலை திமுக தலைவர் ஸ்டாலின், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தந்தை பெரியார் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
திமுக தலைவர் ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை சோசியல் மீடியா மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும் தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பதிவிட்ட ட்வீட் சோசியல் மீடியாவில் வைரலானது.
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. பணப்பட்டுவாடா உள்ளிட்ட முறைகேடுகளை தவிர்க்கும் விதமாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பிலும், வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய எம்.எல்.ஏ. தொகுதியான கொளத்தூரில் திமுக கொடி கம்பங்கள் நடப்பட்டிருந்தன. அவை தேர்தல் நடத்தை விதிமீறல் என்பதால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கொளத்தூரில் நடப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட கொடிக்கம்பங்களை அகற்றினர். இதனால் ஸ்டாலின் பிறந்தநாளுக்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்த திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.