அதிமுக இரண்டாக உடைந்ததையடுத்து சசிகலா அணி ஒ.பி.எஸ் அணி என்ற இரண்டு அரசியல் களம் தமிழகத்தை புரட்டி போடுகிறது.
ஒ.பி.எஸ் போர்க்கொடி தூக்கியதால் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா பல அதிரடி முடிவுகளை கையாண்டார். அதில் அக்கட்சியின் பொருளாளராக இருந்த பன்னீர்செல்வத்தை நீக்கி திண்டுக்கல் சீனிவாசனை தேர்வு செய்தார்.
இதையடுத்து அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் ஒ.பி.எஸ் க்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும் பொதுமக்கள், இளைஞர்கள், அதிமுக தொண்டர்கள், மாணவர்கள் என பன்னீர்செல்வத்தின் வட்டாரம் நீண்டுகொண்டே சென்றது.

இந்நிலையில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனுன், ஒ.பி.எஸ் இல்லத்திற்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார். பின்னர், கட்சிக்கு துரோகம் இழைத்தாக கூறி சசிகலா அவரை கட்சியின் அவைத்தலைவர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக கூறி உத்தரவிட்டார்.
மேலும் அதிமுக மூத்த நிர்வாகி செங்கோட்டையனை அவைத்தலைவராக நியமித்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய மதுசூதனன், சசிகலா வெறும் தற்காலிக பொதுச்செயலாளர் தான் எனவும், அவருக்கு எங்களை பொறுப்பில் இருந்து நீக்க உரிமை இல்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் அதிமுக 'by law' -வில் தற்காலிக பொதுச்செயலாளர் என்ற பதவியே கிடையாது எனவும், வெகுவிரைவில் பொதுச்செயலாளருக்கான தேர்தல் நடத்தப்படும் எனவும், அதை அதிமுக கட்சியின் அடிமட்ட தொண்டர்களே முடிவெடுப்பார்கள் எனவும் தெரிவித்திருந்தார். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதமும் எழுதியிருந்தார்.
இந்நிலையில், சசிகலாவின் அதிமுக பொதுச்செயலாளர் பதவி செல்லாது என மதுசூதனன் அனுப்பியுள்ளதற்கு ஏன் இன்னும் பதிலளிக்கவில்லை என தேர்தல் கமிஷன் அதிமுகவிற்கு கேள்வி எழுப்பியுள்ளது.
