முதல்ல கொங்கு மண்டலத்துக்கு எய்ம்ஸ் கொண்டுவாங்க... அண்ணாமலையைக் கண்டித்த ஈஸ்வரன்..!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஊடகங்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சியை கைவிட்டு எய்ம்ஸ் மருத்துவமனையை கொங்கு மண்டலத்திற்கு கொண்டுவர முயற்சிக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆறு மாதத்திற்குள் ஊடகங்களை நாம் கட்டுப்படுத்தலாம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இது ஊடகங்களின் குரல்வளையை நெறிக்கும் செயலாகவும், ஊடகங்களுக்கு விடப்பட்ட மிரட்டலாகவும் பார்க்கப்படுகிறது. மேலும், ஊடகங்கள் ஆட்சியாளர்கள் செய்யும் தவறை மட்டுமல்ல மக்களின் பிரச்சினைகளை அன்றாடம் பிரதிபலிக்ககூடியது.
‘தமிழகத்திலுள்ள குக்கிராமங்களில் வசிக்கும் மக்களின் அவலங்களை வெளியுலகிற்கு கொண்டு வருவதும் ஊடகங்கள்தான். தமிழகத்தின் உரிமைகளுக்கான குரலை உலகமெங்கும் கொண்டு சேர்ப்பதும் ஊடகங்கள்தான். ஆட்சியில் இருப்பவர்களின் தவறை சுட்டிக்காட்டினால் அதிகாரத்தை கொண்டு ஊடகங்களை அடக்க நினைத்தால் அது அவர்களுக்கே எதிராக மாறிப்போகும்’ என்று எச்சரித்துள்ளார்.
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் எல்.முருகன் தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சராக பொறுப்பேற்று இருப்பதால் ஊடகங்களை எதுவும் செய்ய முடியும் என்று நினைப்பது அதிகாரத்தின் உச்சக்கட்டம். ஆணவத்தின் வெளிப்பாடு. ஊடகங்கள் மீது கோபப்படுவதை நிறுத்திவிட்டு தனது அணுகுமுறையை அண்ணாமலை மாற்றிக்கொள்ள வேண்டும்.
தமிழக முதலமைச்சர் எய்ம்ஸ் மருத்துவமனை கோவைக்கு வேண்டுமென்று பிரதமரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். இதை நிறைவேற்றுவதற்கு தமிழக பாஜக தலைவர் என்ற முறையில் டெல்லிக்கு சென்று முழு முயற்சி எடுத்து பெருந்துறைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வருவதற்கு ஆவண செய்ய வேண்டும்” என்று அறிக்கையில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.