எடப்பாடி.. நீ செல்லூர் ராஜூ மீது கைவைத்து பார்.. மதுரைக்குள் நுழைய மாட்ட.. வெறுப்பேற்றும் நாஞ்சில் சம்பம்.
இப்போது தமிழ்மகன் உசேனுக்கு அவைத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது, அவைத்தலைவர் பதவி என்பது தூக்கி கொண்டாட வேண்டிய பதவி, ஆனால் இப்போதய நிலை அப்படி இல்லை. அதிமுக என்பது எடப்பாடி பழனிச்சாமியால் தூக்க வீடாக மாறிவிட்டது. அதிலும் தமிழ்மகன் உசேன் சசிகலாவின் தீவிர ஆதரவாளர் அவருக்கு தான் இப்போது அவைத்தலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
அன்வர்ராஜா வை நீக்கியது போல முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மீது கை வைத்தால் எடப்பாடி பழனிச்சாமி மதுரைக்குள் நுழையவே முடியாது என அரசியல் விமர்சகர், திராவிட இயக்க பற்றாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். சசிகலாவுக்கு ஆதரவாகவும், அதிமுக ஒருங்கிணைப்பாளர்களுக்கு எதிராகவும் அவர் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் நாஞ்சில் சம்பத் இவ்வாறு கூறியுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா சிறைக்கு சென்ற கையோடு எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் அரியணை ஏறினார். அதைத்தொடர்ந்து ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையின் கீழ் அதிமுக இயங்கிவருகிறது. சிறையிலிருந்து விடுதலையாகியுள்ள சசிகலா மீண்டும் கட்சியை கைப்பற்ற புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் அவர், தனது ஆதரவாளர்களிடம் தொலைபேசியில் உரையாடி அதற்கான ஆடியோக்களை வெளியிட்டு வருகிறார். இது எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. இந்நிலையில் சசிகலாவுக்கு ஆதரவாக பேசுபவர்கள் சசிகலாவை சந்திப்பவர்கள் என பட்டியலிட்டு அவர்கள் கழகத்தின் கண்ணியத்திற்கும், கட்டுப்பாட்டுக்கும் குந்தகம் விளைவித்தார்கள் எனக்கூறி கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுகவை மீட்க வேண்டும் என்றால் பாஜக கூட்டணியில் இருந்து அது வெளியேற வேண்டும் என்றும், பாஜக கூட்டணியில் இருக்கும் வரை அதிமுக படுதோல்வியையே சந்திக்கும் என்றும் கட்சியின் தற்போதைய வீழ்ச்சிக்கு எடப்பாடிபழனிசாமி தான் காரணம் என்றும், எனவே சசிகலாவை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும் என்றும் அவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா பேசிவந்த நிலையில், அவர் கட்டம் கட்டப்பட்டு கட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டு உள்ளார். இது தற்போது அதிமுக தொண்டர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அதிமுக தவறுகளை விமர்சித்து சசிகலாவுக்கு ஆதரவாக பேசுவதுபோன்ற ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் சசிகலா ஆதரவாளர் சக்திவேல் என்பவர் தான் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனக் கூறி, செல்லூர் ராஜுவிடம் பேசியுள்ளார்.
அதாவது சக்திவேல் தொடர்ந்தது சசிகலாவுக்கு ஆதரவாக பல அதிமுக நிர்வாகிகளுடன் பேசி அதற்கான ஆடியோவை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது முன்னாள் அமைச்சரும் மதுரை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான செல்லூர் ராஜூ சிக்கியுள்ளார். அந்த ஆடியோ உரையாடலில், தான் எப்போதும் சின்னம்மாவின் ஆதரவாளராக தான் இருக்கிறேன். இப்போதைக்கு எதையும் பேச முடியாது, அப்படி பேசினால் அவர்கள் விழித்துக் கொள்வார்கள், என்னைப் போல பலரும் இதே மனநிலையில் தான் இருக்கின்றனர். விரைவில் அதற்கான நடவடிக்கையில் இறங்குவோம் என அவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பேசுவது போல அந்த ஆடியோ அமைந்துள்ளது.
இந்த ஆடியோவால் அதிமுகவில் பரபரப்பு அதிகரித்துள்ளது. இதனால், அன்வர்ராஜாவுக்கு அடுத்த விக்கெட் செல்வராஜ் தான் போலா என்று பலரும் பரபரப்பாக பேசி வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் பரவி வரும் குரல் தன்னுடையது அல்ல, தனக்கும் அந்த ஆடியோவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில் அதிமுகவில் தற்போது நடந்து வரும் நிகழ்வுகள் குறித்து திராவிட இயக்க பற்றாளரும், அரசியல் பேச்சாளருமான நாஞ்சில் சம்பத், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டிகொடுத்துள்ளார். அதில், பட்டத்து யானை போல் இருந்த அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி அடியோடு சரித்து விட்டார் என விமர்சித்துள்ளார். அன்வர்ராஜாவை நீக்கியது போல செல்லூர் ராஜு மீது கைவைத்தால் மதுரைக்குள் எடப்பாடி பழனிச்சாமி நுழையவே முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக மேலும் அவர் பேசியிருப்பதாவது, எடப்பாடி பழனிச்சாமி எதிர்கட்சித் தலைவர் ஆகியிருப்பது பாஜக போட்ட பிச்சை, அன்வர்ராஜா போன்ற ஒரு அப்பழுக்கற்ற தொண்டனை அதிமுக இன்று இழந்திருக்கிறது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள அண்ணா திமுக தொண்டர்கள் உடைந்து நொறுங்கிப் போய் உள்ளனர்.
இப்போது தமிழ்மகன் உசேனுக்கு அவைத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது, அவைத்தலைவர் பதவி என்பது தூக்கி கொண்டாட வேண்டிய பதவி, ஆனால் இப்போதய நிலை அப்படி இல்லை. அதிமுக என்பது எடப்பாடி பழனிச்சாமியால் தூக்க வீடாக மாறிவிட்டது. அதிலும் தமிழ்மகன் உசேன் சசிகலாவின் தீவிர ஆதரவாளர் அவருக்கு தான் இப்போது அவைத்தலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. கட்சியில் யார் என்ன பதவியில் இருக்கிறார்கள், யார்? யாருக்கு ஆதரவாளர்கள் என்ற எந்த விவரமும் தெரியாத தற்குறி தான் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுக என்ற கட்சியை கட்டமைக்க ஒரு துரும்பைக் கூட அசைக்காதவர்தான் எடப்பாடி பழனிச்சாமி, விரைவில் சசிகலா வருவதற்கான தட்பவெட்பம் கனிந்தபின் அவருடைய வருகை இருக்கும் . அன்வர்ராஜா பேசியது போலவே இப்போது செல்லூராஜூ பேசிய ஆடியோ ஒன்று வெளியாக இருக்கிறதே என நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நாஞ்சில் சம்பத், அன்வர்ராஜாவை தூக்கியவர்கள் ஏன் செல்லூர் ராஜுவை நீக்கவில்லை. மலேசியாவில் இருந்து வந்த ஒரு நடிகையுடன் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் 5 ஆண்டுகளாக குடும்பம் நடத்தினார். அந்த பிரச்சனையை வெளியில் வந்தும் மணிகண்டனை கட்சியிலிருந்து நீக்கவில்லை. அப்படி என்றால் மணிகண்டனுக்கு எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாக இருக்கிறாரா?
இப்போது அன்வர்ராஜாவை தூக்கியது போல செல்லூராஜூவை எடப்பாடியால் எளிதில் தூக்கிவிட முடியுமா? அப்படி செல்வராஜை எடப்பாடிபழனிசாமி தூக்க முடியாது, செல்லூர் ராஜுவை கட்சியைவிட்டு தூக்கினால் பிறகு எடப்பாடி பழனிச்சாமி மதுரைக்குள் நுழையவே முடியாது. இது எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்கு தெரியும், ஆழம் தெரியாமல் காலை விட்டு எடப்பாடி பழனிச்சாமி அந்த காலை எப்படி மீட்பது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார். இப்போது அதிமுக என்ற கட்சி கரை சேர முடியாமல் தவிக்கிறது. கட்சி கரை சேர வேண்டுமென்றால் சசிகலா என்ற கலங்கரை விளக்கம் வரவேண்டும். இதையான் அதிமுக தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.