உங்களுக்கு 15 நாட்கள் கெடு அதுக்குள்ள... ஓபிஎஸ் - இபிஎஸுக்கு எச்சரிக்கை விடுத்த அதிமுக நிர்வாகி..!
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு யாரையும் கட்சியை விட்டு நீக்கும் அதிகாரமில்லை என்று நோட்டீசில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது குறித்து விளக்கம் கேட்டு சசிகலா ஆதரவாளர் எடப்பாடி சுரேஷ் அக்கட்சியின் தலைமைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூன் 17ம் தேதி சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் சசிகலாவுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியது. இதேபோல ஒவ்வொரு மாவட்ட அதிமுகவிலும் கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அப்போது எடப்பாடி உத்தரவிட்டார். இந்நிலையில், சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடியதை அடுத்து கட்சி கட்டுப்பாடுகளை மீறியதாக கூறி கடந்த 5ம் தேதி எடப்பாடி சுரேஷ் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. எடப்பாடி பழனிசாமி அவரது சமூகத்தினருக்கே பதவிகள் தருவதாக எடப்பாடி சுரேஷ் குற்றம்சாட்டியுள்ளார். அதிமுகவில் உண்மையாக தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு அளிக்கப்படுவது இல்லை என்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில், அதிமுகவில் இருந்து கடந்த 5ம் தேதி நீக்கப்பட்ட சசிகலா ஆதரவாளர் எடப்பாடி சுரேஷ் அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பி இருக்கும் நோட்டீசில், யாரையும் கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் அதிமுகவின் 35 விதி உட்பிரிவு 12ன் படி பொதுச்செயலாளர் சசிகலாவுக்கே உண்டு என்று கூறியிருக்கிறார்.
ஆனால், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு யாரையும் கட்சியை விட்டு நீக்கும் அதிகாரமில்லை என்று நோட்டீசில் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே தம்மை கட்சியை விட்டு நீக்கிய அறிவிப்பை 15 நாட்களுக்கு திரும்ப பெற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் இருவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.