தேர்தலை நேரடியாக களத்தில் சந்திக்க திராணியற்ற கட்சியாக திமுக விளக்குகிறது என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். 

தேர்தலை நேரடியாக களத்தில் சந்திக்க திராணியற்ற கட்சியாக திமுக விளக்குகிறது என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு தேர்தல் நிறைவுபெற்றது. உள்ளாட்சி தேர்தலில் எப்போதுமே அடிதடி சண்டைகள், மோதல்கள், கள்ள ஓட்டு விவகாரம் என பல களேபரங்கள் நடக்கும். ஆனால் அப்படி எதுவும் இல்லாமல் மிகவும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு முடிவடைந்தது. இருப்பினும் ஆங்காங்கே கள்ள ஓட்டு போட்டதாக புகார் எழுந்தது. குறிப்பாக மத்திய இணையமைச்சர் எல்.முருகனின் ஓட்டை யாரோ கள்ள ஓட்டு போட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. இறுதியில் அவர் எந்தவித பிரச்சினையுமின்றி வாக்களித்தார். தமிழ்நாடு முழுவதும் 60.70 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. இது கடந்த ஊரக உள்ளாட்சி மற்றும் சட்டப்பேரவை தேர்தலை விட மிக மிக குறைவாகும்.

குறிப்பாக தலைநகர் சென்னையில் வெறும் 43 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இச்சூழலில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசுகையில், கோவையில் பரிசு பொருட்கள் மற்றும் பணப்பட்டுவாடா விநியோகம் போன்ற அதிக அளவில் தேர்தல் விதிமுறைகள் மீறப்படுவதாக சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் அதிமுக சார்பில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையடுத்து உயர்நீதிமன்றத்தை முறையிட்டு சிறப்பு அதிகாரிகள் முன்னிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இருப்பினும் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மற்றும் சென்னையில் தேர்தல் விதிமுறைகளை மீறி வன்முறைகள் நடைபெற்றுள்ளது. குறிப்பாக சென்னை பல வாக்குச்சாவடிகளில் திமுகவினர் கள்ள வாக்குகளை பதிவு செய்துள்ளனர். தேர்தல் தோல்வி பயம் காரணமாக திமுகவினர் கள்ள வாக்குகளை அதிக அளவில் பதிவு செய்துள்ளனர்.

சென்னை திருவல்லிக்கேணி தொகுதிகளில் திமுகவினர் காவல்துறையினர் மிரட்டி கள்ள ஓட்டு பதிவு செய்ய முயற்சி செய்யும் வீடியோ பதிவு வெளியாகிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறிய அவர் அதுதொடர்பான வீடியோவையும் ஊடகங்களிடம் காட்டினார். தொடர்ந்து பேசிய அவர், நாங்கள் போய் கள்ள ஓட்டு போடுகிறோம் என்று போலீசாரை திமுகவினர் பகிரங்மாக மிரட்டுகிறார்கள். வீடியோவை நீங்களே பாருங்கள். இதைத்தான் நாங்கள் ஆதாரமாக தெரிவிக்கிறோம். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவில் திமுகவினரின் கள்ள ஓட்டு பதிவு செய்திருப்பது என்பது ஜனநாயக நாட்டின் மக்களுக்கு நடக்கும் அநீதி, அதனை தடுக்கும் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுப்பது என்பது ஜனநாயக படுகொலை. இதன் மூலம் தேர்தலை நேரடியாக களத்தில் சந்திக்க திராணியற்ற கட்சியாக திமுக விளக்குகிறது என்று தெரிவித்தார்.