edappadi planning to give minister posting to 5 persons

நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக நெருக்கடி கொடுத்து வரும் எம்.எல்.ஏக்களை சமாளிப்பதற்காக, 5 பேருக்கு அமைச்சர் பதவி கொடுக்க முதல்வர் எடப்பாடி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன், அமைச்சர் பதவியில் உள்ளவர்கள், அந்தந்த மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ க்களை, கூவத்தூர் ஒப்பந்தப்படி கவனிக்கவேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அணி, அணியாக எம்.எல்.ஏ க்கள் கொடுத்து வந்த நெருக்கடியை அடுத்து, நேற்று, எடப்பாடி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடை பெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டம் முடிந்த பின்னர், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அவசரமாக தமிழக பொறுப்பு ஆளுநரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து, ஆரம்பம் முதல் பன்னீரின் எதிர் அணியாக செயல்பட்டு வரும், தங்க தமிழ்செல்வனுக்கு, பன்னீர் வகித்த நிதி அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

அத்துடன், வெற்றிவேல், தலித் எம்.எல்.ஏ க்களை தனி அணியாக திரட்டிய பெரம்பலூர் தமிழ்ச்செல்வன், தஞ்சை ரங்கசாமி, இன்பதுரை ஆகியோருக்கும் அமைச்சர் பதவி வழங்க எடப்பாடி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பெரம்பலூர் தமிழ்ச்செல்வனை தவிர மற்ற நான்கு பேரும் தினகரனின் தீவிர ஆதரவாளர்கள். சசிகலா ஒப்புதலின் பேரிலேயே, இவர்கள் ஐந்து பேருக்கும், அமைச்சர் பதவி வழங்க எடப்பாடி முடிவு செய்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.

அதே சமயம், இளவரசி மகன் விவேக்குடன் நட்பில் இருக்கும், எழில்மாறன் மூலம், அவரது தந்தை பழனியப்பனை, சசிகலா சமாதானப்படுத்தி உள்ளார் என்று கூறப்படுகிறது.

ஆனால், கரூர் செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாச்சலம் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்குவது குறித்து எந்த தகவலும் இல்லை. எனவே, அவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.