‘ஸ்டாலின் ஹீரோ அல்ல...ஜீரோ’... தஞ்சையில் திமுகவை கதறவிட்ட எடப்பாடியார்...!
திருச்சி மாநாட்டில் சினிமா ஹீரோ மாதிரி வருகிறார். ஆனால் ஸ்டாலின் ஹீரோ இல்ல, ஜீரோ.
அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் உள்ள வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் கும்பகோணத்தில் மூவேந்தர் முன்னேற்றக் கழக வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையாருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தில் முதலமைச்சர் பேசியதாவது: ‘வெற்றி நடை போடும் தமிழகம்’ என்ற வார்த்தையைக் கேட்டாலே குதிக்கிறார். அரசு பணத்தை நாங்கள் வீணடிப்பதாக குற்றச்சாட்டுகிறார்.
நாட்டு மக்களுக்கு செய்துள்ள நம்மைகளை தான் ஊடகங்கள் வழியாக தெரிவித்துக் கொண்டிருக்கிறோம். கோவையில் திமுக நடத்திய செம்மொழி மாநாடு நாட்டிற்காக நடந்தது அல்ல; கருணாநிதியின் குடும்ப விழா நடைபெற்றது. அப்போது பல நூறு கோடிகள் வீணடிக்கப்பட்டது. 48 காலம் அதிமுக இயக்கத்தில் உழைத்து முதலமைச்சர் ஆனேன். ஆனால் ஸ்டாலினோ அவங்க அப்பா திமுக தலைவர் என்பதால் அந்த செல்வாக்கில் எம்.எல்.ஏ.ஆனவர்.
திருச்சி மாநாட்டில் சினிமா ஹீரோ மாதிரி வருகிறார். ஆனால் ஸ்டாலின் ஹீரோ இல்ல, ஜீரோ. அரசியலில் கெட்டப் போட்டு வரும் ஒரே தலைவர் திமுக தலைவர் ஸ்டாலின் தான் என சகட்டு மேனிக்கு வெளுத்து வாங்கினார்.
மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சராக இருந்தபோதுதான், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். எங்கள் வாழ்வாதரத்தையும் நிலத்தையும் காப்பாற்றுங்கள் என விவசாயிகள் என்னிடம் கோரிக்கை விடுத்தனர். நான் ஒரு விவசாயி என்பதால் விவசாயிகள் என்னிடம் சட்டம் கொண்டு வந்து எங்கள் நிலத்தை காப்பாற்றுங்கள் என கேட்டனர். டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததன் மூலம், டெல்டா மாவட்டங்களுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பை அதிமுக அரசு உறுதி செய்துள்ளது.