Asianet News TamilAsianet News Tamil

மருந்துகள் வாங்க நாளை வருங்கள்; அடுத்த வாரம் வாருங்கள் என ஏழை மக்கள் அலைக்கழிப்பு.! திமுக அரசை விளாசும் இபிஎஸ்

அரசு மருத்துவமனைகளுக்கு தட்டிப்பாடின்றி மருந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தகுதி வாய்ந்த மருத்துவர்கள் பலர் இருந்தும், மருத்துவ கல்வி இயக்குனர் பணியிடம் ஏன் காலியாக உள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார்.
 

Edappadi Palaniswami alleged shortage of medicines in Tamil Nadu hospital KAK
Author
First Published Nov 14, 2023, 12:43 PM IST

ஏழை எளிய மக்கள் பாதிப்பு

மருந்துகள் தட்டுப்பாடால் ஏழை எளிய மக்கள் அவதிப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,  திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தமிழ் நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் மூலம் மருந்துகள் மொத்தமாக வாங்குவது குறைக்கப்பட்டு, அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவ அதிகாரிகளுக்கு உள்ளூர் கொள்முதல் (Local Purchse) மூலம் பாதியளவு மருந்துகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாக தகவல்கள் தெரிய வருகிறது.

இதனால், மருத்துவமனைகளுக்கு அனைத்து மருந்துகளும் விநியோகம் செய்யப்படாததால் ஏழை, எளிய நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மருந்துகள் வாங்க நாளை வருங்கள்; அடுத்த வாரம் வாருங்கள் என்று அலைக்கழிப்பதால், ஏழை, எளிய நோயாளிகள் பலமுறை பயணச் செலவு செய்து மருத்துவமனைகளுக்கு வந்தும் மருந்து வாங்க முடியாமல் அவதிப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

Edappadi Palaniswami alleged shortage of medicines in Tamil Nadu hospital KAK

விளம்பர மோகத்தில் முதலமைச்சர்

பல ஏழை, எளிய நோயாளிகள் பேருந்து போக்குவரத்து செலவுக்குக் கூட பணம் இல்லாமல் அவர்களது இருப்பிடங்களில் இருந்து வெயிலிலும், மழையிலும் நடைபயணமாகவே வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. விளம்பர மோகத்தில் சுற்றித் திரியும் முதலமைச்சரும், இத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் மந்திரியும், யார் எப்படி போனால் நமக்கென்ன? நமக்கு நம்ம சுயநலம் தான் முக்கியம். பொதுமக்களிடம் தங்களது ஒவ்வொரு அசைவையும் விளம்பரப்படுத்தி, எப்படி 2021 தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் விளம்பரம் மூலம் வெற்றி பெற்றோமோ, அதுபோல், வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலிலும் வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்துடன், விளம்பர மோகத்துடன் செயல்பட்டதால்தான் 23.7.2023 அன்று மதுரையில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் ஒரு எதிர்கால தமிழகத்தை கட்டமைக்க இருந்த 20 வயது பொறியியல் மாணவனை நாம் இழந்திருக்கிறோம்.

Edappadi Palaniswami alleged shortage of medicines in Tamil Nadu hospital KAK

அதிமுக திட்டங்கள் மூடல்

எனது தலைமையிலான அம்மாவின் அரசு, ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருத்துவப் பணியாளர் என நியமித்து அம்மா மினி கிளினிக்குகளை தமிழகமெங்கும் துவக்கியது. இதன்மூலம், தமிழகத்தின் மூலை முடுக்குகளில் உள்ள ஏழை, எளிய மக்கள் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற பருவ நோய்களுக்கு எளிதாக சிகிச்சை பெற்றனர். ஆனால், விடியா திமுக அரசு பொறுப்பேற்றவுடன், முதல் வேலையாக தமிழக மக்களுக்கு சேவை செய்து வந்த அம்மா மினி கிளினிக்குகளுக்கு மூடுவிழா நடத்திவிட்டு,

பெயரை மாற்றி 'நகர்ப்புற மருந்தகம்' என்ற பெயரில் வெறும் 700 மருந்தகங்களை, நகர்ப்புறப் பகுதிகளில் மட்டும் துவக்கியுள்ளது. இதனால், கிராமப் பகுதிகளில் வாழும் மக்களை சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற சாதாரண நோய்களுக்கும் நகரங்களை நோக்கி அலையவிட்டதுதான் இந்த விடியா திமுக அரசின் சாதனை.

Edappadi Palaniswami alleged shortage of medicines in Tamil Nadu hospital KAK

மருத்துவர்கள் இல்லாத அவலம்

இரு நாட்களுக்கு முன்பு சென்னை மாநகர ஆணையாளர், அடிபட்ட தனது உதவியாளர் ராமன் என்பவருக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக, 24 மணி நேரமும் செயல்பட வேண்டிய சென்னை மாநகராட்சி மருத்துவமனைக்கு சென்றபோது, அங்கு ஒரு மருத்துவர் கூட இல்லாத நிலையில், தனியார் மருத்துவமனையில் தனது உதவியாளருக்கு மருத்துவம் பார்த்துள்ளார். மேலும், அவரை மேல்சிகிச்சைக்கு சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்ப அவசர கட்டுப்பாட்டு அறை மூலம் ஆம்புலன்ஸை அழைத்தும்,

மிகுந்த காலதாமதத்திற்குப் பின்னர் ஆம்புலன்ஸ் வந்துள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளின் செயல்பாட்டிற்கு இது ஒரு சிறந்த உதாரணமாக உள்ளது. இந்த விடியா திமுக ஆட்சியில் பல ஆண்டுகளாக துறையின் உயர் அதிகாரியாக இருந்த அவரது உதவியாளருக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன ?

Edappadi Palaniswami alleged shortage of medicines in Tamil Nadu hospital KAK

மருத்துவ பணியாளர் சிகிச்சை

அதேபோல், தீபாவளி அன்று சிவகங்கை அரசு மருத்துவமனையில் வெடி விபத்தில் காயமடைந்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாமல், மருத்துவப் பணியாளர்கள் சிகிச்சை அளித்த நிகழ்வும் ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அம்மாவின் ஆட்சியிலும், எனது தலைமையிலான அம்மாவின் அரசிலும், தமிழக சுகாதாரத் துறை முதன்மை துறையாகத் திகழ்ந்தது. எங்களது ஆட்சியில் மத்திய அரசிடம் இருந்து பல்வேறு விருதுகளைப் பெற்ற அதே தமிழக சுகாதாரத் துறை, இன்றைய விடியா திமுக ஆட்சியில் அதிக விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள துறையாக மாறியுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது.

கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து பணிபுரிந்த மருத்துவர்கள் தற்போது மனம் வெதும்பி உள்ளனர். தற்போதைய காட்டாட்சி தர்பார் நடத்தும் விடியா திமுக ஆட்சியாளர்களின் கொடுங்கரங்களில் சுகாதாரத் துறை சிக்கி சீரழிந்துவிட்டதை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள். இந்த கையாலாகாத ஆட்சியாளர்களுக்கு வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவது உறுதி.

Edappadi Palaniswami alleged shortage of medicines in Tamil Nadu hospital KAK

மருத்துவ கல்வி இயக்குனர் பதவியிடம்

இனியாவது அரசு மருத்தவமனைகள், மருத்துவப் பணியாளர்கள், கட்டுப்பாட்டு அறை ஆகியவை முழுமையாக இயங்கவும்; காலியாக உள்ள அனைத்து மருத்துவப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்பவும்; அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் உடனடியாக தேவைப்படும் மருந்துப் பொருட்களை வழங்கிட வேண்டும் என்றும்; கிராமப் பகுதிகளிலும் அரசு கிளினிக்குகளை திறந்திட வேண்டும் என்றும்; இந்திய மருத்துவக் கல்வி இயக்குநர் பணியிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும், நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசின் முதலமைச்சரையும், சுகாதாரத் துறை மந்திரியையும் வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

சென்னையில் மீண்டும் விபத்து... அரசு பேருந்தும் வேனும் மோதிக்கொண்டதில் தனியார் நிறுவன ஊழியர் துடி துடித்து பலி

Follow Us:
Download App:
  • android
  • ios