எடப்பாடி பழனிசாமியை சான்றோனாய் உயர்த்திய அன்புத் தாய்... ஓ.பி.எஸ் உருக்கம்..!
பெற்றெடுத்து,பேணி வளர்த்து, சான்றோனாய் உயரச்செய்த அன்புத் தாயாரின் பிரிவால் துயருற்றிருக்கும் முதல்வர் பழனிசாமிக்கு ஆறுதல் கூற வார்த்தையில்லை.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (93), உடல்நலக்குறைவு காரணமாக சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று நள்ளிரவு காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஓ.பன்னீர்செல்வம், துணை முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘’அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமியின் அன்புத் தாயார் தவுசாயம்மாள் 93-வது வயதில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பால் நேற்று நள்ளிரவில் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு பெரிதும் வருத்தமுற்றேன்.
பெற்றெடுத்து,பேணி வளர்த்து, சான்றோனாய் உயரச்செய்த அன்புத் தாயாரின் பிரிவால் துயருற்றிருக்கும் முதல்வர் பழனிசாமிக்கு ஆறுதல் கூற வார்த்தையில்லை. தாயன்புக்கு நிகர் என்ன இருக்க முடியும்? பாசமிகு தாயார் தவுசாயம்மாளை பிரிந்து வாடும் எடப்பாடி பழனிசாமிக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினருக்கும் குடும்ப நண்பர்களுக்கும் எனது சார்பிலும், அதிமுகவின் சார்பிலும் அனுதாபத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த தாயார் தவுசாயம்மாளின் ஆன்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.தவுசாயம்மாளின் நினைவுகளைப் போற்றி வணங்குகிறேன்’’எனத் தெரிவித்துள்ளார்.