முதல்வர் பொறுப்பு யாருக்கு..? எடப்பாடி முடிவால் அதிர்ந்துபோன ஓபிஎஸ்..!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த மாதம் இறுதியில் வெளிநாடு சுற்றுப்பயணம் செல்ல உள்ள நிலையில், அவருடைய பொறுப்புகளை யாருக்கு வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்திருந்தது. இந்நிலையில், அவரது பொறுப்புகள் யாரிடமும் ஒப்படைக்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த மாதம் இறுதியில் வெளிநாடு சுற்றுப்பயணம் செல்ல உள்ள நிலையில், அவருடைய பொறுப்புகளை யாருக்கு வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்திருந்தது. இந்நிலையில், அவரது பொறுப்புகள் யாரிடமும் ஒப்படைக்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு முறை பயணமாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகளில் வரும் 28-ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவருடன், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, தொழில் துறை அமைச்சர் சம்பத், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஊரக தொழில்துறை அமைச்சர் பென்ஜமின் உள்ளிட்டவர்கள் மற்றும் அந்த துறை செயலாளர்கள், அதிகாரிகள் குழுவும் உடன் செல்கிறார்கள். மீண்டும் செப்டம்பர் 9-ம் தேதி அன்றுதான் அவர் சென்னை திரும்ப உள்ளார்.
வழக்கமாக, மாநிலத்தின் முதல்வர் வெளிநாட்டுக்கு செல்லும்போது பொறுப்பு முதல்வர் ஒருவரை அறிவித்து, அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு செல்வது வழக்கம். அந்த வகையில் துணை முதல்வராக இருக்கக்கூடிய ஓபிஎஸ்ஸிடம் பொறுப்புகளை எடப்பாடி பழனிச்சாமி ஒப்படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அவரிடம் ஒப்படைக்கமாட்டார் என்ற தகவல் வெளியாகின. மாறாக, எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகவும் நெருக்கமானவரும், நம்பிக்கைக்குரியவருமான எஸ்.பி.வேலுமணியில் ஒப்படைத்து செல்ல உள்ளதாக தகவல் வெளியாகின.
இந்நிலையில், பொறுப்பு முதல்வர் பதவி யாருக்கும் வழங்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் பழனிசாமி வெளிநாட்டு பயணத்தின்போது தனது பொறுப்புகளை அவரே கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முக்கியமான கோப்புகளை முதல்வர் எங்கிருக்கிறாரோ அங்கிருந்து கையெழுத்திட்டு பேக்ஸ் மூலம் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து விடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
காரணம், யாருக்காவது பொறுப்பு முதல்வர் பதவி வழங்கினால், அதனால் ஏதாவது பிரச்சனை வந்துவிடக்கூடாது என்பதற்காக முதல்வர் எடப்பாடி மிகவும் எச்சரிக்கையாக இருப்பதாக கூறப்படுகிறது. முதல்வரின் இந்த முடிவால் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.