ஜெயலலிதா இறந்த பின்பு இயற்கை சீற்றங்களாலும், கொரோனா தொற்று ஏற்பட்டதாலும் கடுமையான சவால்களை சந்தித்து அதிமுக ஆட்சி 4 ஆண்டுகள் எனது தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. 

அடுத்தவர் உழைப்பில் முன்னேறும் குள்ளநரி குறித்து நாம் கவலைப்பட வேண்டாம் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி பேசுகையில்; ஜெயலலிதா இறந்த பின்பு இயற்கை சீற்றங்களாலும், கொரோனா தொற்று ஏற்பட்டதாலும் கடுமையான சவால்களை சந்தித்து அதிமுக ஆட்சி 4 ஆண்டுகள் எனது தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. 

ஜெயலலிதா 1996 மற்றும் 2006ம் ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். ஒரு தொண்டனாக கட்சியை வழிநடத்தி அதைவிட கூடுதல் வெற்றியை 2021 சட்டமன்ற தேர்தலில் பெற்றுள்ளோம். ஒரு லட்சத்து 98 ஆயிரம் வாக்குகள் மேலும் பெற்றிருந்தால் 45 சட்டமன்ற தொகுதிகளை பிடித்து இருக்க முடியும். நிறைய இடங்களில் 1000, 500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளோம். இதற்கு நமது உழைப்பு குறைவு என்றுதான் கூற முடியும்.

நான் 20 வயதில் கட்சியில் இணைந்து, கிளை நிர்வாகியாக துவங்கி படிப்படியாக வளர்ந்து, இந்த நிலைக்கு வந்துள்ளேன். பல்வேறு கட்சியில் இருந்து வந்தவர்கள் தான், கட்சியை விட்டு சென்றனர். அதிமுகவின் பலம் ஒரு நாளும் குறையாது. சொந்த உழைப்பில், சொந்த செல்வாக்கில் முன்னேற வழி இல்லாதவர்கள், அடுத்தவர் உழைப்பை சுரண்டி சாப்பிட நினைப்பவர்கள் இக்கட்சியில் இருந்து வெளியேறி உள்ளனர்.

அதிமுகவின் உண்மை தொண்டன் எல்லாம் சொக்கத்தங்கம்; கட்சியை விட்டு சென்றவர்கள் எல்லாம் தலையிலிருந்து உதிர்ந்த முடியை போன்றவர்கள். உதிர்ந்த முடி ஒன்றுக்கும் உதவாது என்றார். பல கட்சி மாறியவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது தவறாகிவிட்டது. நம்மால் நீக்கப்பட்ட அவர்கள் யார்? என்பது உங்களுக்கே தெரியும் என சசிகலாவை மறைமுகமாக சாடியுள்ளார்.