ஆட்சியிலும் நெருக்கடி - கட்சியிலும் நெருக்கடியா? செய்வதறியாமல் திணறும் எடப்பாடி!
அமைச்சராக இருந்து ஆனந்தமாக வலம் வந்த நான், முதலமைச்சராகி, மூச்சுக்கு முன்னூறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டி உள்ளதே என்று விரக்தியில் இருக்கிறார் முதல்வர் எடப்பாடி.
தமிழகம் முழுவதும் பொது கூட்டங்கள் நடத்தி, ஆளும் எடப்பாடி அரசை கையாலாகாத அரசு என்று பகிரங்கமாக விமர்சித்து வருகிறார் பன்னீர். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் கூட்டம் சேர்வது கண்டு வெறுப்பில் இருக்கிறார் எடப்பாடி.
மறுபக்கம், அமைச்சர் பதவி கேட்டும், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வரும் எம்.எல்.ஏ க்களை சமாளிக்க முடியாமலும் அவர் திணறி வருகிறார்.
இந்த தலைவலி எல்லாம் போதாதென்று, மாவட்ட செயலாளர்கள் மீது புகார் பட்டியல் வாசிக்கும் கட்சி தொண்டர்களால், என்ன செய்யது? என்று தெரியாமல் தவிக்கிறார் எடப்பாடி.
கடந்த சட்டமன்ற தேர்தலில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பல தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக, கன்னியாகுமரி மாவட்டத்தில், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
அதனால், விஜயகுமார் என்பவர் கன்னியாகுமரி மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டு, கட்சியை வளர்க்க, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை சிறப்பாக பணியாற்றிய அவர் மீது, தற்போது தொண்டர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அவர் கட்சிக்காரர்களை மதிப்பதில்லை. வியாபாரிகளிடமும், கான்டராக்டர்களிடமும் பணம் வசூலிக்கிறார். கட்சி நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தவில்லை என்று எடப்பாடிக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
அதே போல பல்வேறு மாவட்ட செயலாளர்கள் மீதும் புகார் கூறும் கட்சி தொண்டர்கள், அவர்களை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அந்த புகார்களை எல்லாம் உளவு துறையிடம் கொடுத்து, அதில் எந்த அளவு உண்மை இருக்கிறது? என்று விசாரிக்க சொல்லி இருக்கிறார் முதல்வர் எடப்பாடி.
அந்த புகார்கள் உண்மை என்று தெரிந்தால், சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்களை நீக்கி விட்டு, கட்சியின் மூத்த நிர்வாகிகள் அடங்கிய குழு ஒன்றை நியமித்து, நிர்வகிக்கவும் அவர் முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.
எனினும், முதல்வர் என்ற தலைமை பதவியில் இருக்கும் தன்னுடைய பேச்சை, சில அமைச்சர்களும், எம்.எல்.ஏ க்களுமே கேட்பது இல்லை. இந்நிலையில் கட்சியில் உயர்ந்த பொறுப்பில் இல்லாத, தம்முடைய பேச்சை அவர்கள் எப்படி கேட்பார்கள்? என்றும் அவர் அஞ்சுகிறார்.
சசிகலாவும், தினகரனும் சிறையில் உள்ள நிலையில் கட்சியையும், ஆட்சியையும் தெரிந்தோ, தெரியாமலோ காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தமக்கு இருப்பதால், எதையாவது செய்துதான் ஆகவேண்டும் என்றும் அவர் நினைக்கிறார்.
ஆனாலும், தாம் மேற்கொள்ளும் நடவடிக்கையால், கட்சிக்கு எந்த வித பாதிப்பும் வந்து விடக்கூடாது என்ற அச்சமும் அவருக்கு ஒரு பக்கம் உள்ளது.
ஆட்சியில்தான் நெருக்கடி என்றால் கட்சியிலும் நெருக்கடியா? என்று அவர் விரக்தியில் இருக்கிறார்.
அதன் காரணமாக, அமைச்சராக இருந்து ஆனந்தமாக வலம் வந்த நான், முதல்வராகி மூச்சுக்கு முன்னூறு பிரச்சினையில் சிக்கி, தவியாய் தவிக்கிறேன் என்று, தமக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி எடப்பாடி புலம்பி வருகிறாராம்.