ஆட்சிய காப்பாத்த என்ன வேணாலும் பண்ணுவோம்… பெரும்பான்மையை நிரூபிக்க பழனிச்சாமியின் வியூகம்…!
பழனிச்சாமி அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடக்கோரி திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின்போது, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என அவர்கள் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என பதிலளிக்குமாறு சபாநாயகர் மற்றும் சட்டப்பேரவை செயலர் ஆகியோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து மதியம் பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே நடவடிக்கை எடுக்கப்படாது என கூறமுடியாது. நடவடிக்கை எடுப்பது சபாநாயகரின் அதிகாரத்துக்குட்பட்டது. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என வாதாடினார்.
இதுதான் அரசின் வியூகம். அதாவது மொத்தம் உள்ள 234 எம்.எல்.ஏக்களில் ஜெயலலிதா இறந்துவிட்டதால் மீதம் இருப்பது 233. இந்நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலை பழனிச்சாமிக்கு ஏற்பட்டால், தினகரனுக்கு 19 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதால், பெரும்பான்மயை நிரூபிக்க முடியாது. எனவே அந்த 19 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்துவிட்டால் மீதமுள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 214. 214 உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இருக்கும்போது பெரும்பான்மையை நிரூபித்துவிடலாம் என்ற பழனிச்சாமி அரசின் வியூகம் நீதிமன்றத்தில் அளித்த பதில் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.
அதுமட்டுமல்லாமல், சட்டமன்றத்திற்கு குட்காவை எடுத்து வந்ததற்காக 21 திமுக எம்.எல்.ஏக்கள் மீதும் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க முயற்சி நடக்கிறது.
ஆனால் இவையனைத்திற்கும் உயர்நீதிமன்றம் முட்டுக்கட்டை போட்டுவிட்டது.