Edappadi Palanasamy Pressmeet

சென்னையில் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தேங்கிய நீரை, மாநகராட்சி அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு அகற்றியதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், மற்றும் அதிகாரிகள் சென்னையில் இன்று ஆய்வு நடத்தினர். 

சென்னை, மின்ட் பகுதியில் மழையால் பாதித்த இடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதன் பின்னர், தாம்பரம் அருகே பெருங்களத்தூர், மேடவாக்கம், பள்ளிக்கரணை உள்ளிட்ட இடங்களில் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வுக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது, தாழ்வான பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற, போர்க்கால அடிப்படையில் மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து பணியாற்றி வருகின்றனர் என்றார். ஆய்வின்போது, பொதுமக்கள், வெள்ளநீர் பாதிப்பில் இருந்து நிரந்தர தீர்வு வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக கூறினார்.

ஜெயலலிதா ஆட்சியின்போது, தாழ்வான பகுதியில் உள்ள நீரை வடிகால் வசதி கொண்டு அகற்றுவதற்காக சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் அறிவிப்பு செய்து முதற்கட்டமாக ஆயிரத்து நூறு ரூபாய் ஒதுக்கீடு செய்து வடிகால்வாய்கள் கட்டப்பட்டது. இது 300 கிலோ மீட்டருக்கு கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய பணி விரைந்து கட்டி முடிக்கப்படும் என்றார்.

எஞ்சியுள்ள வடிகால் பணி துவங்கப்படும். தாழ்வான பகுதிகளில் எல்லாம் வடிகால் வசதி ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார். 3 நாட்கள் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள நீரை, மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து செயல்பட்டதால் தண்ணீர் அகற்றப்பட்டதாக கூறினார். சில இடங்களில் தேங்கியுள்ள மழை நீரை விரைந்து அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்கள் எந்த விதத்திலும் பாதிக்காத வகையில் அரசு துரித நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. சென்னையில் நேற்று 36 செ.மீ. மழை பெய்தாலும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மழைநீர் அகற்றப்பட்டது.

கால்வாய்கள் அகலப்படுத்தப்பட்டுள்ளது என்றும், நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் இடித்து தள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார். தமிழகத்தில் உள்ள பல்வேறு ஏரிகள் தூர் வாரப்பட்டதாகவும், இதனால், 30 சதவீத நீர் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். அடையாறு தூர் வாரப்பட்டு, கரை அகலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் நீர் தடையின்றி செல்ல கால்வாய்கள் தூர் வாரப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.